Header Ads



அக்குரணையில் சோதனை - 25 பேர் கைது, தௌஹீத் ஜமாத் அலுவலகத்திலிருந்து ஒருசில பொருட்களும் மீட்பு


Colombo (News 1st) அக்குரணை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது படைப்பிரிவினர் இன்று -01- விசேட சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பிரதேசம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, இன்று மாலை வரையில் சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கியொன்று, போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு தொகை வாகன இலக்கத்தகடுகள், ஒரு தொகை பிறப்புச்சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றும் அவர்களிடம் இருந்து பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் ஒரு தொகை ஊசிகளும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. அவை இலங்கையின் வைத்தியர்கள் பயன்படுத்தாத ஊசிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக இவை கொணரப்பட்டன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குண்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 150 Circuit Breaker-உம் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறினர்.

அக்குரணை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது ஒரு தொகை இறுவெட்டுகள், 4 கெமராக்கள், ஒரு தொகை துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்ட சில பொருட்களை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.

No comments

Powered by Blogger.