Header Ads



அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்கவில்லை, 10.000 புலனாய்வாளர்கள் களத்தில் - ரணில்

முழு உலகமும் பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து முகங்கொடுக்க வேண்டுமென்றும் இதனால், பயங்கரவாதிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளுடனும் இணைந்து அவற்றின் ஒத்துழைப்புடன் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புலனாய்வுத் தகவல்கள் மற்றும் விசேட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதே எமது எதிர்பார்ப்பாகும். அதுமட்டும் போதுமானதல்ல, நாடு என்ற வகையில் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமாகும். எமது பாதுகாப்பு தேசிய மற்றும் சர்வதேச தரப்பினரதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு பலவீனப்பட இடமளிக்க முடியாது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தை தமது அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்தும் அரசியல் அமைப்புக்களைக் கொண்ட போலி தேசப்பற்றாளர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய ஊடகங்கள் தொடர்பில் நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பெல்லாம் வெசாக் பண்டிகைக்கு முன்பதாக நாட்டில் மத ரீதியான மோதல்களைத் தோற்றுவிப்பதேயாகும். அதன்மூலம் வெசாக் பண்டியை சீர்குலைப்பதற்கான பின்புலத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை நான் பொறுப்புடன் கூற விரும்புகின்றேன்

என்றும் நாட்டு மக்களுக்கு நேற்று (30) பிரதமர் விடுத்துள்ள விசேட அறிக்ைகயில் தெரிவித்தார். எமது புலனாய்வுப் பிரிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும் இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முறையாக ஈடுபட்டுவருகின்றனர். இதன்மூலம் எஞ்சியுள்ள சிலரையும் நாம் விரைவில் கைதுசெய்ய முடியும்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நான் நிஹாப் மற்றும் புர்கா உடைகளுக்கான தடைக்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததாக சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டதும் மேற்படி செயற்பாட்டின் பின்னணியே. உண்மையில் முஸ்லிம் தலைவர்கள் மேற்கொண்ட இந்த யோசனைக்கு முழு அமைச்சரவையும் இணக்கம் தெரிவித்தது. எனினும், ஊடகங்கள் மேற்கொண்ட இந்தப் பொய்ப்பிரசாரத்தில் சாதாரண மக்கள் மட்டுமன்றி மதத் தலைவர்களும் ஏமாற்றப்பட்டனர். இதிலிருந்து தெரியவருவது, ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதேயாகும். வெசாக் பண்டிகையின் பெறுமதி தெரியாதவர்கள் இதனை சீர்குலைப்பதற்குத் தயாராகும் இத்தகைய ஊடகத்தினர் எந்தத் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

இது சாதாரணமான நிலைமை அல்ல. உலகப் பயங்கரவாதத்துக்கு நாம் அகப்பட்டுள்ள நிலையாகும். எதிர்காலத்திலும் உலகப் பயங்கரவாதத்துக்கு முகங்கொடுத்து அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நாம் தயாராகவேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். இத்தகையதொரு காலகட்டத்தில் மத ரீதியான மோதல்கள் மற்றும் இனரீதியான மோதல்களை ஏற்படுத்துவதற்காகப் பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரும். அனைவருக்கும் நான் தெரிவிக்க விரும்புவது, பல்வேறு ஊடகங்கள் மூலம் காதால் கேட்பதும் கண்களால் பார்ப்பதையும் முழுமையாக நம்பவேண்டாம். அனைத்திலும் அவதானமாக செயற்படுவது முக்கியம். பௌத்த மதத்தினராகிய நாம் மிக விசேடமாகக் கொண்டாடும் வெசாக் பண்டிகை வருகின்றது. வெசாக் பண்டிகை ஒத்திப்போட முடியாதவொரு பண்டிகையாகும். அன்றைய தினத்தில் நாம் தானதர்மங்கள் உட்பட மத வழிபாடுகளில் ஈடுபடுவோம். விஹாராதிபதிகளான தேரர்கள் இது தொடர்பில் தமது பரிபாலன சபையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நான் நம்புகின்றேன். அதற்காக பிரதேச பாதுகாப்புப் பிரிவினர் அவசியமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்கத் தயாராகவுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் நாட்டுக்காக நாம் அனைவரும் கைகோத்து செயற்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்புப் பிரிவினருடன் நான் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். உலகப் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு நாம் அன்றாட செயற்பாடுகளை ஆரம்பிப்போம். அவதானத்துடன் செயற்படுவோம். மக்கள் நலனுக்காக முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி ஐந்து வருடங்களுக்குப் பின்னர் வீடியோவொன்றில் தோன்றி தகவலொன்றை வெளியிட்டார். அந்தத் தகவல் தொடர்பில் சர்வதேச புலனாய்வுப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

அவரிடம் இறுதியாகவிருந்த அதிகார பிரதேசத்தை சிரியாவின் பாகஸ் நகரில் குர்த்தி முதன்மை படையினர் கைப்பற்றியதற்குப் பழிவாங்கும் வகையில் மேற்படி அனைத்து தாக்குதல்களையும் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கத்தோலிக்கர்கள் மீது நடத்திய தாக்குதல்களில் தாம் மகிழ்ச்சியுறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உலகில் எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இது முழு உலகிற்கும் அச்சுறுத்தலான தகவலாகும். இதனால் நாம் எமது நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டியுள்ளது.

உதிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் நாம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இடம்பெற்றுள்ள குறைபாடுகள் தொடர்பில் நாம் வாதவிவாதங்களை மேற்கொள்வதைவிடுத்து நிலைமையைச் சீர்செய்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நடவடிக்கை எடுத்தோம்.

இதற்கிணங்க தற்போது தாக்குதல் மேற்கொண்ட பெரும்பாலானோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் தாக்குதல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்து வைத்திருந்த வெடிபொருட்கள் மற்றும் உபகரணங்களில் பெரும்பாலானவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவற்றை இச்சந்தர்ப்பத்தில் வெளியிடுவது உசிதமல்ல. குறுகிய காலத்தில் எம்மால் இவற்றை நிறைவேற்ற முடிந்தமைக்கு எமது புலனாய்வுப் பிரிவினர் மற்றும் முப்படையினரின் திறமையே காரணமாகும்.

எமது புலனாய்வுப் பிரிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும் இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முறையாக ஈடுபட்டுவருகின்றனர். இதன்மூலம் எஞ்சியுள்ள சிலரையும் நாம் விரைவில் கைதுசெய்ய முடியும்.

இவர்கள் அனைவரையும் நாம் கைது செய்தாலும் அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்கவில்லை. அல்பக்தாதியின் வெளிப்பாட்டின்படி அவர் எத்தகைய பின்னடைவை சந்தித்தாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற தாக்குதல்களை மேற்கொள்ளத் தயாராவார் என்பது தெரிகிறது. எனவே, சர்வதேசத்துடன் இணைந்து நாம் பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.