சு.க. ஆதரவின்றி எந்த வேட்பாளருக்கும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்போ, ஒத்துழைப்போ இன்றி எந்த வேட்பாளருக்கும் அந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நடவடிக்கை அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்த விரும்பும் கட்சி. எமது கட்சி கூட்டணி அமைத்தே அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றது.
ஜனாதிபதியுடன் அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரிவான கூட்டணியை ஏற்படுத்தவே விரும்புகிறார். கூட்டணி விரிவடையும் வெற்றியும் உறுதியாகும்.இதன் காரணமாகவே நாங்கள் மொட்டு கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம்.
எனினும் மொட்டுக் கட்சியினர் கூறுவதை போல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மொட்டுக் கட்சியிடம் அடிப்பணிய வைக்க நாங்கள் தயாரில்லை.
தவறியேனும் அடிப்பணிந்தால் நாம் அடிப்பணிய போவதில்லை கட்சியே அடிப்பணிய நேரும். இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எமக்கும் கஷ்ட காலத்தில் எங்களுடன் இருந்த கட்சியினரை மறக்க முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தினாலும் எமது கட்சியின் அடையாளம் பாதுகாத்துக்கொண்டு அதனை முன்னெடுப்போம்.
அதனை விடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்பணிய வைக்கும் எந்த பேச்சுவார்த்தைகளையும் நடத்த மாட்டோம் என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment