ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்த, பலமான கூட்டணி வேண்டும் - வாசுதேவ
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரமல்ல பொதுஜன பெரமுனவும் பொது தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டால் தோல்வியே கிடைக்கப்பெறும். ஐக்கியதேசிய கட்சியை வீழ்த்த வேண்டுமாயின் பலமான கூட்டணியமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தைகள் பல கேள்விகளை தோற்றுவித்துள்ளன.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பற்ற தன்மையின் காரணமாக பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் கூட்டணியமைப்பது பயனற்றது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். இரு தரப்பினரது பலவீனமான செயற்பாடுகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கே பலமானதாக காணப்படும்.
இரு தரப்பிலும் காணப்படுகின்ற போட்டித்தன்மையினால் தனித்து போட்டியிடுவது சிறந்தது என்று குறிப்பிடுவது தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு சாத்தியமற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினால் தனித்து போட்டியிட்டு ஒருபோதும் வெற்றிப் பெறமுடியாது.சுதந்திர கட்சியின் பலம் எத்தன்மையானது என்பதை இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி பெறுபேறுகளின் ஊடாக புரிந்துக் கொள்ளாம்.
ஐக்கிய தேசிய கட்சியினை வீழ்த்த வேண்டுமாயின் இருதரப்பினரும் விட்டுக்கொடுப்புகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
(இராஜதுரை ஹஷான்)
Post a Comment