கிழக்கிற்கு தலைமை வேண்டுமா...?
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலம் என்பது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் பலத்தில்தான் தங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு வெளியே மூன்றில் இரண்டு வீதமான முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், அவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் போன்று செறிந்து வாழவில்லை. இதனால்தான், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் பலம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகின்றது. அதே வேளை, கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் பலம் முக்கியமானது. ஏனைய மாவட்டங்களை விடவும் அம்பாறை மாவட்டத்தில்தான் முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகமாகும். இங்குதான் முஸ்லிம்கள் அதிகூடிய பெரும்பான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதனால், முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் கிழக்கு மாகாணத்தையும், அம்பாறை மாவட்டத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அதிக கரிசனை காட்டுதல் வேண்டுமென பேசப்படுகின்றது. ஆனால், இன்று முஸ்லிம்களின் அரசியல் கட்சிகள் என்றும், தலைவர்கள் என்றும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமைகளை புறக்கணித்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை தேசிய தலைவர்கள் என்று அழைத்துக் கொண்டாலும், அந்தத் தலைவர்கள் பம்மாத்து அரசியலையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் அரசியலைச் செய்யாது சிங்கள பேரினவாதத்தையும், தமிழ்ப் பேரினவாதத்தையும் திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இன்றைய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் பலத்தைக் கொடுக்கக் கூடிய கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கவுமில்லை. தேசிய ரீதியில் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளவில்லை. இவர்கள் முஸ்லிம்களின் அரசியல் பலத்தைச் சிதைத்து பேரம் பேசும் சக்தியையும் இழந்து நிற்கின்றார்கள்.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் இலங்கை முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கு அரசியல் கட்சி எதுவுமில்லை என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தார். அவர் இலங்கை முஸ்லிம்களுக்கு தேசிய ரீதியாகக் குரல் கொடுத்தார். இலங்கை முஸ்லிம்களின் அரசியலை பலமிக்கதாக மாற்றினார். இதன் மூலம் முஸ்லிம் அரசியலுக்கு பேரம் பேசும் சக்தியையும் உருவாக்கினார். அஸ்ரப்புக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ளவர்களே அரசியல் தலைமையைக் கொடுத்தார்கள். ஆயினும், அவர்கள் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை கருத்திற் கொள்ளவில்லை. அதே வேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து தேசிய கட்சிகளின் மூலமாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம்கள் கூட கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி பேசவில்லை. இதனால்தான், முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற தேவை உணரப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு பல அநியாயங்களையும் மேற்கொண்டிருந்தார்கள். அதே வேளை, அரசாங்கம் முஸ்லிம்களையும் தமிழர்களை மோதவிடும் சூழ்ச்சிகளையும் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில் அஸ்ரப் தேசிய ரீதியில் குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பலமாகக் குரல் கொடுத்தார். இதனால், முஸ்லிம் காங்கிரஸிற்கு நாடு பூராகவும் முஸ்லிம்களிடையே பலத்த ஆதரவு காணப்பட்டது. இதனால், அச்சப்பட்டவர்கள் முஸ்லிம் காங்கிரஸையும், அதன் தலைவர் அஸ்ரப்பையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். தமிழ் ஆயுதக் குழுக்கள் அஸ்ரப்புக்கு மரண அச்சுறுத்தல்களையும் விடுத்திருந்தன.
அஸ்ரப்பின் நடவடிக்கைகள் அவரை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ள வைத்தது. அது மாத்திரமின்றி இலங்கை முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் தகுதி கிழக்கு முஸ்லிம்களுக்கே இருக்கின்றதென்று கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள முஸ்லிம்களினாலும் சிலாகித்துக் கூறப்பட்டது. இதனால், இலங்கை முஸ்லிம்களுக்கு யார் அரசியல் தலைமை கொடுக்க வந்தாலும் அவரை அஸ்ரப்புடன் ஒப்பிட்டு நோக்கும் கொள்கை ஒன்று முஸ்லிம்களிடையே தானாகவே வளர்ந்துள்ளது. இதனால், இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முதல் ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் முழுமையாக தேசிய தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளது. இதே வேளை, இத்தலைவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணி முதலான பல பிரச்சினைகளை தீர்க்காது, வாக்குகளை மாத்திரம் குறிவைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இக்குறுகிய சிந்தனையால் அஸ்ரப் கட்டியெழுப்பிய முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் சக்தி அமைச்சர் பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும், வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் பேரினவாதக் கட்சிகளிடம் அறுதியாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் பலம் மிகவும் மோசமாக பின்னடைந்துள்ளது. கட்சியின் தலைவர் பதவியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அஸ்ரப்பினால் ஒழிக்கப்பட்ட பிரதேசவாதம் மிகவும் மோசமாக விதைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட தலைவர் பதவி போட்டியின் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாத் துண்டாடப்பட்டன. இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸை விட்டுப் பிரிந்தவர்களும், முஸ்லிம் காங்கிரஸில் தொடர்ந்து இருந்தவர்களும் தங்களின் தலைவர் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரதேசவாதத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள். இதனால், ஒவ்வொரு பிரதேசமும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கோரி நின்றன. அதே வேளை, தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமென்று எல்லா பிரதேசங்களிலும் உறுதிமொழி வழங்கப்பட்டது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு வாக்குறுதிகளை அளித்தார்.
மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் பல கட்சிகள் தோற்றம் பெற்றன. இன்று முஸ்லிம்களிடையே செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுள் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மாத்திரமே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். இத்தலைவர்கள் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அஸ்ரப்பைப் போன்று செயற்படாது இருப்பதனால் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டுமென்று தெரிவிக்கின்றார்கள். பொதுவாக முஸ்லிம்களின் அரசியல் தலைமை கிழக்கு மாகாணத்திலிருந்து தோற்றம் பெற வேண்டுமென்று கூறப்படுகிறது. கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே எழுந்துள்ள இக்கோரிக்கைகளின் பின்னால் வலுவான காரணங்கள் உள்ளன. தேசிய தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்கள் கட்சியின் கீதங்களையும், அஸ்ரப்பின் கருத்துக்களையும், கவிதைகளையும் வைத்துக் கொண்டும், கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற கோசத்தை வைத்துக் கொண்டும் கட்சியையும், தலைவர் பதவியையும் பாதுகாத்துக் கொள்ளலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்த சிந்தனை பிழையானது என்று கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் காட்டியுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அக்கட்சி கடந்த காலங்களில் தமது கட்டுப்பாட்டில் இருந்த உள்ளுராட்சி சபைகளை இழந்து நிற்கின்றது.
இதே வேளை, கிழக்கு மாகாணத்தில்தான் முஸ்லிம்களின் கிழக்கு தலைமை இருக்க வேண்டுமென்று முன்வைக்கப்படும் கோசத்தை ஆராயும் போது அக்கோசம் பெரும்பாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் ஆகியோர்களின் தலைமைகளின் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் முன்வைக்கப்படுகின்றது. இவ்விரு தலைவர்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களில்லை. ஆனால், இவர்களின் கட்சிக்கே கிழக்கு மாகாணத்தில் செல்வாக்கு அதிகமாகும். இதனால், இவர்களை வீழ்த்த வேண்டுமாயின் கிழக்கு எனும் பிரதேசவாதத்தை முன்வைப்பதே இலகுவான வழிமுறை எனக் கண்டுள்ளார்கள். இத்தலைவர்கள் கிழக்கு முஸ்லிம்களினது உரிமைகளை புறக்கணித்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதில் உண்மையில்லாமலில்லை. பொத்துவில் முதல் புல்மோட்டை வரை காணிப் பிரச்சினை, நுரைச்சோலை வீட்டுத்திட்டப் பிரச்சினை, ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசதங்களில் காணப்படும் கடலரிப்பு பிரச்சினை, இறக்காமம் மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட பிரச்சினை, கரையோர மாவட்ட பிரச்சினை, கல்முனை பிரச்சினை என கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
அதே வேளை, கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி எதனையும் பேசவில்லை. தாம் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் கட்சித் தலைமையின் குறுகிய செயற்பாடுகளையும் அங்கீகரித்துக் கொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். மேடைகளில் கட்சித் தலைமையை புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தப் புகழ்ச்சிகள் தமக்கு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுத்ததற்காகவே அன்றி வேறு எதற்குமில்லை.
மறுபுறத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதாவுல்லாஹ் தேசிய காங்கிரஸை ஆரம்பித்தார். அவர் கூட கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி பேசவில்லை. மஹிந்தராஜபக் ஷவின் அரசாங்கத்தின் போது முஸ்லிம்கள் பௌத்த இனவாதிகளினால் தாக்கப்பட்டார்கள். அதன்போதெல்லாம் அரசாங்கத்தை கடிந்து கொள்ளவில்லை. ஏனைய முஸ்லிம் கட்சிகளைப் போலவே அதாவுல்லாஹ்வும் நடந்து கொண்டார். மேலும், மஹிந்தராஜபக் ஷவின் அரசாங்கத்தில் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அமைச்சராக இருந்தார். இவர் கூட முஸ்லிம்களின் உண்மைக் குரலாக செயற்படவில்லை. ஆதலால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே உள்ள தலைவர்களைப் போன்றே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலமாக முஸ்லிம்களின் அரசியல் தலைமை கிழக்கு மாகாணத்தில்தான் இருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்திற்கு வெளியே இருக்க வேண்டுமென்ற கருத்துக்களுக்கு அப்பால் சிந்திக்க வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் அரசியல் தலைவர் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால், அவர் முஸ்லிம்களின் குரலாக, முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் சக்தியை வளர்க்கக் கூடியவராக, பதவிகளினால் கட்டுண்டவராக, மிக மோசமான பலவீனங்களை கொண்டிருக்காதவராக இருக்க வேண்டும். அப்போதுதான் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமைகளை மட்டுமன்றி முழு நாட்டினதும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி பேசுகின்றவராகவும், செயற்படுகின்றவராகவும் இருக்க முடியும்.
முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற போது முஸ்லிம்களிடையே கட்சிப் போட்டிகளும், பிரதேசவாதங்களும் நிறைவாகக் காணப்பட்டன. தமிழர்கள் பிரதேசவாதங்களை புறக்கணித்து சுயாட்சியை வேண்டிப் போராடிக் கொண்டிருக்கும் போது முஸ்லிம்களிடையே காணப்பட்ட பிரதேசவாதம் முஸ்லிம்களின் அரசியல் பலத்தை சிங்கள பேரினவாதக் கட்சிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டிருந்தன. இதனால், முஸ்லிம்களை ஒரு கட்சியின் கீழ் ஒற்றுமைப்படுத்த வேண்டுமென்று மர்ஹூம் அஸ்ரப் திட்டமிட்டார். இவர் பிரதேசவாதத்திற்கு எதிராகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு பெரும்பான்மையான முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரஸின் கீழ் ஒற்றுமைப்படுத்தினார். இந்த ஒற்றுமையை பிற்பட்ட காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ்தான் தமது அரசியல் தேவைக்காக குழைத்து மீண்டும் பிரதேசவாதத்தை உருவாக்கியது. ஓவ்வொரு பிரதேசத்திலும் உள்ள கட்சியின் முக்கிய உறுப்பினர்களை தலைமை தமது தேவைக்கு ஏற்ற வகையில் பிரித்தாளுகை செய்தது. சமூகத்தின் தேவையை விடவும், கட்சித் தலைமைக்கு கண்மூடித்தனமாக விசுவாசம் காட்டுகின்றவர்களை நேசிக்கும் நிலையை தலைமை வளர்த்துக் கொண்டது.
பிரதேசவாதம் வளர்க்கப்பட்டதனால் ஒவ்வொரு ஊரும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்டன. சமூகத்தை நேசிக்காது தலைமையை நேசித்தமையால் பாராளுமன்றத் தேர்தல்களின் போது இவர்கள்தான் வேட்பாளர்கள் என்று அம்பாறை மாவட்டத்தில் மூன்று பேர் திணிக்கப்பட்டார்கள். இதனால், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால், சமூகத்தின் உரிமைகளைப் பேசக் கூடியவர்கள், சமூகம் விரும்பக் கூடியவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், சமூகத்தின் உரிமைகளை மணலுக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும், கொந்தராத்துக்களுக்காகவும் விலை பேசும் தரகர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற அஸ்தஸ்தைப் பெற்றுக் கொண்டார்கள். இத்தகையவர்கள் அரசாங்கத்தினால் கிடைக்கும் தொழில் வாய்ப்புக்களை கையூட்டல்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் உரிமை அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள், உண்டியல் வைத்து தேர்தல்களை எதிர் கொண்டவர்கள் கோடிகளின் அதிபதிகளாக உருமாறியுள்ளார்கள்.
முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் அக்கட்சிகளுக்கு கிழக்கு மாகாணத்தில்தான் செல்வாக்கு அதிகமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஆதரவை வைத்துக் கொண்டுதான் கெபினட் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்கின்றார்கள். ஆனால், அவர்கள் தங்களின் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதில்லை. தங்களின் பிரதேசங்களில் கட்சியை வளர்க்க முடியாதவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்து கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாயின் இந்த இயக்கம், கட்சி வாழ வேண்டுமென்று ஒவ்வொரு மேடைகளிலும் தெரிவித்துக் கொண்டே வருகின்றார். ஆனால், தமது பிரதேசத்தில் கட்சியை வளர்க்க முடியவில்லை. இதுதான் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் இலட்சணமாகும்.
இன்றைய அரசாங்கத்தின் காலத்திலும், மஹிந்தராஜபக் ஷவின் அரசாங்கத்தின் போதும் முஸ்லிம்கள் பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால், கிச்சன் கெபினட் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டது. இன்றைய அரசாங்கத்தில் கண்டி மாவட்டத்தில் ஐந்து நாட்களாக முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காவல்துறையினரின் முன்னிலை யிலேயே முஸ்லிம்கள் தாக்கப்பட் டார்கள். இதன்போது கூட முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு துணிவு கொள்ளாதவர்கள், அரசாங்கத்தையும், ரணில் விக்கிரமசிங்கவையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் பல போராட்டங்களை நடத்தினார்கள். நீதிமன்றம் சென்றார்கள். ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்கள். ஆனால், முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானதென்று அவர்களுக்கு தெரியவில்லை. சமூகம் எக்கேடு கெட்டாலும் தமக்கு சுகபோகங்களையும், அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ள கட்சியையும், தலையையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தங்களையும், சமூகத்தையும் எந்தத் துன்பத்திற்கும் உள்ளாக்குவதற்கு தயங்கமாட்டார்கள். இதனால்தான் முஸ்லிம் கட்சிகள் சமூகத்தின் அரசியலைச் செய்யவில்லை என்று கூறப்படுகின்றன. அதனால்தான் அரசியல் தலைவர்களில்லாத சமூகமாக முஸ்லிம்கள் உள்ளார்கள்.
எஸ்.றிபான்
இவரும் அவர்களைப் போன்றே இன்னொரு அரசியலைப் பேசுகிறார்.
ReplyDeleteWHAT WRITER BROTHER S. RIFAN (எஸ்.றிபான் ) has stated/writing is the TRUTH and NOTHING BUT THE TRUTH, Alhamdulillah. The Muslims in Sri Lanka DO NOT need the leadership of Rauf Hakeem or Rishad Bathiudeen or Attaullah or Hisbullah or the SLMC or the SLMC or the National Congress in the EASTERN PROVINCE FOR LEADERSHIP, Insha Allah. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money and the National Congress is only concerned in now to make Ataullah an MP/Minister again. The Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits as well explained by the writer Brother S, Rifan (எஸ்.றிபான் ). The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government as did the Mahinda government do and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. The media will play their role to misguide the sincere and "Appaavi Muslimgal". Like what happened in Aluthgama and Beruwela, Maharagama, Dambulla and Kandy they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. A few Muslim media like Jaffanamuslim.com have NOT failed to report unbiasedly. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community in the Eastern Province with “NEW LEADERSHIP” to face any new election in the coming future, Insha Allah. IT IS TIME UP THE EASTERN PROVINCE MUSLIMS OF SRI LANKA SHOULD SUPPORT THE FORMATION OF A NEW POLITICAL FORCE IN THE EASTERN PROVINCE WHICH HAS TO ALSO INCLUDE THE MUSLIMS OF THE TRINCOMALEE DISTRICT FROM PULLMODAI TO BATTICOLA EMBRACING MULIPOTAANA, KANTALAI, TAMPALAKAAMAM, KINNIYA, MUTUR, TOHPPUR AND SERUWILA. THIS NEW POLITICAL FORCE OR POLITICAL PARTY SHOULD REPRESENT THE POLITICAL ASPIRATIONS AND INSPIRATION AND THE VOICE OF THE MUSLIMS OF THE EASTERN PROVINCE OF SRI LANKA IN THE FUTURE, INSHA ALLAH.
ReplyDeleteTHE MUSLIM VOICE IS FULLY WILLING TO SUPPORT SUCH A NEW POLITICAL FORCE/POLITICAL PARTY, INSHA ALLAH. THE MUSLIMS OF THE EASTERN PROVINCE SHOULD GIVE SERIOUS THOUGHT TO THIS SUGGESTION/PROPOSAL MADE BY “THE MUSLIM VOICE”, INSHA ALLAH.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
When it comes leadership for Muslims it must come from pious people. And when it's matter the area, it is not east or west, but the priority has to give the people who always do their early morning joint prayer in first row!
ReplyDeleteகிழக்கிற்கு தலைமை வேண்டும் என்பது சம்பந்தமாக எங்களைப் போன்ற அறிவாளிகளிடம் நீங்கள் எல்லாம் ஆலோசனை கேட்டு நடந்திருந்தால் தற்போதைய இக்கட்டான நிலைமை முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கவே மாட்டாது.
ReplyDeleteஉடனடியாக ஹிஸ்புல்லாஹ் சேருக்கு ஏதோ வெளி நாடொன்றில் குடியுரிமை எடுத்து அங்கே அனுப்பி வையுங்கள். மற்றும் அதாவுல்லாஹ் சேருக்கும் சவுதியில் அல்லது டுபாயில் குடியுரிமை எடுத்து அவர்களையும் அங்கே அனுப்பி வையுங்கள். பாவம்தானே றிசாத். அவருக்கும் ஏதோ சப்பானுக்கு அல்லது கொரியாவிற்கு குடியுரிமை எடுத்து அவரையும் அங்கே அனுப்பி வையுங்கள். ஹக்கீம் ஐயாவிற்கு சம்மாந்துறையில் அல்லது கல்முனையில் ஒரு வீடு கொடுத்து அவரது வாக்குரிமையையும் மாற்றி கிழக்கின் குடிபதியாக்கி விடுங்கள். கிழக்கிற்கு தலைமை வேண்டும் என்ற பிரச்சினை முற்றாக நீங்கி விடுகின்றது. எப்படி ஐடியா! நாங்க எல்லாம் ஐடியா சொன்னா யாருப்பா கேட்க போறாங்க. ம் ம் ம்!
டேய், டேய் நான் சும்மா சொன்னேன் டா. நீங்க கிழக்கு மாகாணத்தாக்கள். செஞ்சாலும் செஞ்சு போடூவீங்க. ராசாக்களா. அப்பிடி எல்லாம் செஞ்சு போடாதிங்கடா.
ReplyDelete