Header Ads



இஸ்மாயில் ஹஸ்ரத்தின், ஒருநாள் இரவு

நான் A /L படிக்கும் காலம். ஏறாவூரில் ஒரு குடும்பத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்காக இஸ்மாயில் ஹஸ்ரத் வந்திருந்தார்கள். அன்று இரவு அவருடைய பணிவிடைக்காக நான் அமர்த்தப்பட்டேன்.

இதனால் அவருடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ். ஹஸ்ரத் அவர்களுடன் இருந்த அந்த சொற்ப நேரத்திற்குள்ளால் ஹதீஸில் சொல்லப்பட்ட நிறைய சுன்னாக்கள் அவரால் உயிர்ப்பிக்கப்படுவதை என் கண்களால் பார்க்க கிடைத்தது. சுப்ஹானல்லாஹ்.

ஹஸ்ரத் அவர்கள் ஏறாவூருக்கு வரும்போது இரவு ஒரு 11.00மணி இருக்கும். பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு சாப்பாட்டை பிஸ்மியுடன் ஆரம்பித்தார்கள். ஒவ்வரு முறையும் உணவை வாயினுள் வைக்கும் போது அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தினார்கள்.

சாப்பாட்டுக்கு பின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தாடியை கிளீன் ஷேவ் செய்த நிலையில் வந்தார். அவரிடம் பணிவாக இதை வளர்த்தால் அல்லாஹ்வின் அன்பு கிடைக்கும் என்பதாக சொல்லிவிட்டு, பின்பு அவரை பலமுறை அழைத்து உங்களுக்கு நான் சொன்னது உங்களை பாதித்தால் அல்லாஹுக்காக என்னை மன்னியுங்கள் என்று மன்னிப்பும் கேட்டார். தாடி வைப்பது என்பது சுன்னத். ஆனால் ஒரு மனிதனுடைய உள்ளத்தை உடைப்பது ஹராம் என்பதாக எங்களிடம் சொன்னார்கள்.

பிறகு தூங்குவதற்காக வுழு செய்துவிட்டு வந்து துஆ செய்ய ஆரம்பித்தார்கள். பின்னர் தொழ எழுந்து நின்று (சரியாக நினைவில்லை) 2 றகத் தொழுதார்கள்.பின்பு என்னிடம் மகன், என்னை தகஜ்ஜத்துக்கு எழுப்பிவிடுங்கள் என்று கூறிவிட்டு (ஒரு தூங்கினார்கள். ஒரு அடிமையின் தூக்கம் போலவே அவர் தூங்கியது என் கண்ணில் இன்னும் நினைவில் இருக்கிறது.)
தூக்கமும் ஓரிரு மணித்தியாலம்தான் தூங்கி இருப்பார்கள்.( களைப்போடு வந்திருந்த அவர்களை எழுப்ப எனக்கு மனம் வரவில்லை.)
03.00மணிக்கு (சரியாக நினைவில்லை) ஹஸ்ரத் என்று ஒரு மெல்லிய சத்தம்வைக்க, பதட்டத்துடன் எழும்பி அல்லாஹ்வை புகழ்ந்து துஆவை ஓதிவிட்டு மிஸ்க்வாக் செய்து உளு செய்து தகஜ்ஜத்தொழ ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சிரியம் ஒரு ஸுஜூதில் 30நிமிடங்களை கழித்தார்கள். (இதுவரை நான் யாரையும் இப்படி பார்த்ததில்லை) யாருக்கும் இவருடைய வணக்கம் இடைஞ்சலாக இருக்கவில்லை.

(சரியாக நினைவில்லை) பின்பு அல்லாஹ்வை திக்ர் செய்து துஆவுடன் தன்னுடைய தஹஜ்ஜுத்துடைய அமல்களை பூர்த்தி செய்தார்கள்.

சுபஹ் தொழுகைக்கான அதான் நேரம் நெருங்கியதும் (அதான் நேரத்திற்கு முன்பு), தாஹா ஹுசைன் சேர் உட்பட ஏறாவூர் ஏரியாவின் மர்கஸ் பொறுப்புதாரிகளை சந்திக்க வேன்டும் என்று சொன்னார்கள். நான் மர்கஸ் பொறுப்புதாரிகளுக்கு அறிவித்துட்டு ஹஸ்ரத் அவர்களிடம் அவர்களுடைய பிரயானம் காலை 5 மணிக்கு என்று ஞாபகப்படுத்தினேன். எல்லோரிடமும் அறிவித்து விட்டேன்.

சுப்ஹு தொழுகைக்கு பிறகு ஏறாவூர் ஜிப்பிரி தைக்கா பள்ளியில் ஒன்று சேர்ந்து ஒரு சிறிய பயான் செய்ய ஆரம்பிக்கும் போது நான் மீண்டும் பஸ் யாருக்காகவும் WAIT பன்ன மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு உரையை கேட்க ஆரம்பித்தேன்.

30நிமிடம் வரை பேசினார்கள். நான் பஸ் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன். அங்கே அப்போதான் அந்த பஸ் வந்தது. விசாரித்தபோது ட்ரைவர் லேட் என்று சொன்னார்கள். சுமார் வழமையாக புறப்படும் நேரத்தை விட 1மணி நேரம் தாமதமாகவே அன்று பஸ்ஸும் புறப்புட்டது.

அல்லாஹ் தனக்கு கட்டுப்பட்டு வாழும் தன்னுடைய நல்லடியார்களுக்கு என்றும் உதவி செய்வான்.
நானும் பலமுறை அவர் தொழுகையை போல தொழுவதற்கு நேரம் எடுத்து முயறசி செய்துள்ளேன். அனால் முடியவில்லை .

முக்கியமான விடயம், இவ்விடத்தில் நான் அவரிடத்தில் பார்த்ததை எழுதி இருக்கின்றேன். அவருடைய அந்தரங்கமும் முடிவுகளும் அல்லாஹ்விடமே. அல்லாஹ் அவரை கபூல் செய்வானாக !!!! ஆமீன்.

அவர் எங்களிடம் ஒரு திக்ர் சொன்னர்.

"அல்லாஹ் என்னை பார்க்கிறான். அல்லாஹ் என்னோடு இருக்குறான்." (இதனை நாம் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் மறந்துவிடக்கூடாது.)

விடிய விடிய பாவத்தில் கழிக்கும் மனிதர்கள் இருப்பதை போல, இரவை அல்லாஹ்வின் வணக்கத்தில் கழிக்கும் நல்லடியார்களும் இந்த பாவங்களால் நிறைந்த குழப்பங்களால் சூழப்பட்ட உலகத்தில் வாழ்கிறார்கள்.

நாம் செய்கின்ற எத்தனையோ மார்க்கத்திற்கு முறனான விடயங்களுக்கு தற்கால உலகத்தின் போக்கையும் சூழலையும் சொல்லி மக்களிடம் தப்பிவிடுகின்றோம். ஆனால் இதே உலகத்தின் போக்கில் இதே சூழலில் இதே காலப்பகுதியில் மார்க்கத்திற்கு முறன்படாமல் வாழ்ந்த நல்லடியார்களை முன்னிறுத்தி உதாரணத்திற்காக நாளை மறுமையில் அழ்ழாஹ் நம்மிடம் கேட்கும்போது என்ன பதில் சொல்லப்போகின்றோம்?? 

மக்களிடம் சொன்ன அதே காரணங்களை சொல்லமுடியுமா???

ஏறாவூர் அக்ரம்

4 comments:

  1. மார்கத்துக்கு முரண்படாமல் வாழ்ந்த
    நல்லடியார்கள் என்ற விடயத்தில் ஒரு சகோதர், இஸ்மாயில் மௌலவி அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றி குறிப்பிட்டுருந்தார்,அல்ஹம்தி
    லில்லாஹ் அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக ஆமீன்
    இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளில் மட்டும் தம்மை ஈடுபாடு
    காட்டுமாறு குறிப்பிடவில்லை.மாறாக
    சமூகத்தோடு நாம் சேர்ந்து வாழவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அப்போது
    இந்த சமூகத்துக்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி எழுகின்றது.
    அல்லாஹ்வுக்கு ஒருஅடியான் செய்யவேண்டிய கடமைகள் ,வணக்க
    வழிபாடுகள் போல ஒரு அடியானுக்கு ஒரு அடியான் செய்ய வேண்டிய முன்மாதிரிகள் ,சேவைகள், பொறுப்புக்கள்,
    கடமைகள் உள்பட அவனோடு எவ்வாறு
    கூடி வாழ்ந்து அவனது மனம் நோகா
    வண்ணம் கவனமாக செயல்படுவதனயும் இஸ்லாம்அழகாக
    சொல்லியிருக்கிறது அவன் எந்த இன, மத, மொழியுடையவனாக இருந்தாலும்சரி.நாம் அல்லாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் விட்டதற்காகா அவனிடம் மன்னிப்பு கேட்டால் அவன்
    மன்னிப்பதாக வாக்களித்து இருந்தாலும்,ஒரு அடியானுடைய விடயத்தில் நாம் ஏதும் தவறு விட்டிருந்தால் அந்த மனிதன் மன்னிக்காதவரை அல்லா எம்மை மன்னிக்கமாடான் என மிக உறிதியாக
    அவன் கூறி இருப்பதனால் மனிதர்கள் விடயத்தில் நாம் எவ்வளவு கவனமாக
    இருக்க வேண்டும். ஆனால் இன்று நாம்
    மற்றவர்களை பற்றி கவலைப்படுவதில்லை.நானும் எனது
    குடும்பமும் நன்றாக வாழ்ந்தால் போதும் மற்றவர்பற்றி எனக்கு கவலயில்லை என்ற சுய நல மனநிலையோடு நாம்வாழ தொடங்கிவிட்டோம். மற்றவர்களின் உயர்ச்சியை ,நலன்களை நற்பண்புகளை குழிதோண்டி புதைத்துவிட்டு அவனுக்கு முற்றிலும்
    மாறு செய்துவிட்டு நாம்வாழ முயற்சிக்கின்றோம்.இன்நிலையில்
    எமது
    வணக்கவழிபாடுகளை அல்லாஹ் எவ்வாறு அங்கீகரிப்பான்? சமூக சிந்தனையோடு பொதுநல மனப்பாங்கோடு இனத்துவேச சிந்தனையற்ற முறைமையில் நாம்
    எத்தனைபேர் இருக்கின்றோம்.மௌலவி அவர்களைப்போல் மிகவும்
    குறைவானவர்களே இந்தப்பண்புகளோடு இருக்கின்றார்கள்.கிராமங்கள்,வீதிகள்
    தோறும் பல பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன,மத்ரசாக்களும் அவ்வாறே உள்ளன .இஸ்லாமிய இயக்கங்களும் அதன்பயான்களும்
    பிரமாதம் படித்தவர்கள் பட்டதாரிகள்
    எம்மத்தியில் ஏராளம் அரசியல் கட்சிகளுக்கும் எம் சமூகத்தில் குறைவில்லை செல்வந்தர்களும்
    உள்ளனர் இவைகளையெல்லாம்
    கொண்டு இஸ்லாம் கூறும் வாழ்கை
    முறைமையை வாழத்தெரியாமல்,வழிகாட்ட ஆளில்லாமல் சிக்கித்தவித்து சீரளிந்து
    கொண்டிருக்கின்றது எம் சமூகம்.
    இதற்கு மற்ற சமூகத்தவரை குற்றம்
    சொல்லி குறைகாண்பது என்ன நியாயம்.மனிதவாழ்கைக்கு தேவையான முன்மாதிரியை காண்பிக்க வேண்டிய
    எம்சமூகம் இன்று நிலை தடுமாறி
    மற்றவர்களின் நகைப்புக்கிடமாய் உள்ளது. எதனால்?
    இன்று தலைமைகள் மிகவும் சுய நலத்தோடு சிந்தித்து செயல்பட முனைகிறது. அரசியல் கட்சிதலைமை
    என்றாலும்சரி சமய இயக்க தலைமைகள் என்றாலும் சரி அல்லது
    வேறு எந்த தலைமை என்றாலும் சரி
    முதலில் தனது இருப்பு,தான்சார்ந்த அமைப்பின் இருப்பு தனது சொந்த பந்தங்களின் நலன் அதற்கப்பால் தனது ஊர் பிரதேசம் தனது இனம் என இவ்வாறு சுயநலத்தோடுதான்சிந்திக்கிறார்கள்
    செயல்படுகிறார்கள்.அதைால்தான்
    இவ்வளவு தலைவர்கள் எம் சமூகத்தில் தலைதூக்கியுள்ளனர். நாமும் சுயநலன்
    உள்ளவர்கள் என்பதனால் அவர்களையே தெரிவுசெய்தும்வருகின்றோம்.மாறாக
    தலைவர்கள்பொது நல உணர்வேடு
    சிந்தித்து செயல்பட முற்பட்டால் அங்கு
    ஒரேஒரு தலைமை உருவாகி அதனால் அச்சமூகமும் ஒற்றுமைப்பட்ட சமூகமாக
    உருமாறி தனது பலத்தால் தனதுதேவைகள நிறைவுசெய்து கொள்ளும் ஆனால் அந்த பாக்கியம்
    எமது சமூகத்து இது வரை கிடைக்காமை துர்ரதிஸ்டமானது.

    ReplyDelete
  2. Received ...

    இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.இஸ்மாஈல் ஹஸரத் மரணித்துவிட்டார்,என்ற செய்தி பொய்யாக இருந்துவிடக்கூடாதா என்று உள்மனம் ஏங்கிக்கொண்டிருக்கிறது.

    அவர் என் தாயின் உடன்பிறந்த சகோதரர். சிறுவயது முதலே உம்மா எங்களுக்கு கதையாகச்சொன்னதெல்லாம் இஸ்மாஈல் மாமாவின் ஆன்மீக வாழ்வில் நடந்த அற்புத சம்பவங்களைத்தான். அதனால்தானோ என்னவோ "இஸ்மாஈல் மாமா"என்றாலே உள்ளத்துக்குள் ஒரு உற்சாகம் ஊற்றெடுக்கும்."மகள்" என்று அழைத்தபடியே வந்து ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து தன் ஜுப்பா பொக்கட்டினுள்ள டொபிகளை அப்படியே அள்ளி கைகளில் திணிப்பார். அவர் கையில் வைத்திருக்கும் அசாவை வைத்து விளையாடுவதென்றால் எங்களுக்கெல்லாம் நிரம்பவும் இஷ்ட்டம்.யானை சவாரி,குதிரை சவாரி என எங்களை அவர் மேல் ஏற்றி வைத்து விளையாடுவார்.

    அல்லாஹு ஹாலிரீ...
    அல்லாஹு நாலிரீ...
    அல்லாஹ் என்னோடிருக்கிறான்.!
    அல்லாஹ் என்னைப்பார்க்கிறான!
    என்று விளையாட்டோடு விளையாட்டாக அவர் கற்றுத்தந்த பாட்டு, எனக்குள் தக்வாவை வளர்த்தது.

    சிறுவயதில் மிக திறமையான மாணவராக இருந்த அவர் கம்பளை சாஹிராவில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்து விட்டு மருத்துவத்துறையில் தனது மேற்படிப்பை தொடர்வதா அல்லது தஃவாவில் இறங்குவதா? என இரண்டு திருப்பங்களுடைய முனையில் தஃவா பாதையை தேர்ந்தெடுத்தார்.

    ஹஸ்ரஜி இனாமுல் ஹஸன்(ரஹ்) அவர்களுடைய நேரடி மாணவரான இவர், டெல்லியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது, தம் வாழ்வில் நடந்த ஈமானிய சோதனைகளை கதைபோல சொல்வார்கள்.உண்மையில் கண்முன்னே கபூலாகும் அவரது துஆக்களையும் அவருக்கு பிரத்தியேகமாக கிடைக்கும் அல்லாஹ்வின் உதவிகளையும் "கராமா"களையும் எங்களில் நிறையப்பேர் கண்டிருக்கிறோம்.

    அற்புதமான குணங்களுக்கு சொந்தக்காரர் அவர். பணிவுதான் அவரது கிரீடமாக இருந்தது.நேசிப்பதில் அவர் யாரிடமும் பாரபட்சம் பார்த்ததில்லை. அல்குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களது சுன்னாஹ்வையும் பெயரளவிலல்லாமல் உயிரினும் மேலாக நேசித்தார். சுன்னாக்களை அனுஅனுவாகப்பின்பற்றுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
    அவரது உடை (ஸல்)அவர்களது உடையை ஒத்திருந்தது.
    அவரது பாதணி கூட அச்சு அசல் சுன்னத்தாய்த்தான் அமைந்திருந்தது.
    (ஸல்) நடக்கும் போது பள்ளத்தில் இறங்குவது போல முன் காலை அழுத்தி நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு போதும் சத்தமிட்டு சிரிக்கக்கூடியவர்களாக இருக்கவில்லை.புன்னகைக்கக்கூடியவர்களாகவே இருந்தார்கள். இதையெல்லாம் நான் நேரடியாக மாமாவிடம் பார்த்திருக்கிறேன்.
    தாவூத் நபியின் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். திப்புநபவியே அவரது முழு வாழ்க்கைக்கும் வைத்தியமாக அமைந்தது.

    எனக்குத்தெரிந்து யாரைப்பற்றியும் அவர் புறம் பேசி , பொய் பேசி பார்த்ததில்லை.

    உலகலாவிய ரீதியில் சுமார் 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தஃவாப்பணிக்காக சென்றிருக்கிறார். அமெரிக்க பல்கலைக்கழகமொன்று அவரை சிறப்பு வளவாளராக கூப்பிட்டு கௌரவித்தது. உலகம் முழுவதிலுமுள்ள ஏராளமானோரின் ஹிதாயத்துக்கும் இஸ்லாஹ் விற்கும் இவர் காரணமாக அமைந்திருக்கிறார். மதீனா இமாம்களோடு நெருக்கமான உறவு வைத்திருந்தார். புனித கஃபதுல்லாஹ்வின் கிஸ்வா துணி மாற்றப்படும் போது முந்தைய துணியின் பாகமொன்று இவருக்கும் வழங்கப்பட்டது. இன்னும் ஏராளமான பிரத்தியேக சிறப்புக்கள் இவருக்கு இருக்கின்றன.

    ரசூலுல்லாஹ்வின் அத்தனை சுன்னாக்களையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவே நின்கு திருமணங்கள் செய்திருந்தார். அத்தனை பேரிடமும் பாரபட்சமின்றி நடப்பதற்காக மிகவும் பிரயாசைப்பட்டார். அவரது மரணசெய்தியைக்கேட்ட மனைவிகள் சொன்னது இதுதான். "நாங்கள் உங்களை முழுமையாக பொறுந்திக்கொண்டோம்."

    சமீபத்தில் ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிவிட்டு இறுதியாக, "மகள் மன்னிச்சுக்கோங்க! மாமாவுக்காக துஆ செய்துக்கோங்க! என்று சொன்னபோது எனக்கு உண்மையில் கண்கலங்கிவிட்டது.

    .

    அவரது ஜனாஸாவில் அக்குறணை வரலாற்றிலேயே இல்லாத அளவு மக்கள் கலந்து கொண்டார்கள். ஜனாஸா இறுதிவரை உலமாக்களினது அவரது மாணவர்களினாலுமே சுமந்து செல்லப்பட்டது. மண்வெட்டியின் தேவையின்றி அத்தனைபேரின் கைப்பிடி மண்ணுமே அவரது கப்ரை நிரப்பியது.

    அதிகமாக விமர்சிக்கப்பட்ட மனிதரும் அவர்தான்.
    அதிகமாக நேசிக்கப்பட்ட நபரும் அவர்தான்.

    அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கண்ணியம் எனும் ஆடையை அணிவிக்கிறான்.

    அல்லாஹ் அவரை பொறுந்திக்கொண்டு பிர்தௌஸுல் அஃலாவில் ஹபீப் (ஸல்)அவர்களுடனும் சித்தீக்கள் ஷுஹதாக்கள்,ஸாலிஹீன்களுடனும் குடியமர்த்துவானாக...!

    ஆமீன்.

    #மஹ்ஜபீன்
    #08.april 2019

    ReplyDelete
  3. ஹஸ்ரத் இஸ்மாயில் மௌலானா அவர்களுடன் பழகிய பேசிய அரும் பாக்கியம் சந்தர்ப்பம் எனக்கும் சிலபோது கிடைத்தமைக்காக நான் அல்லாஹ்வைப் புகழ்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ். அம்மணி மஹ்ஜபீன் அவர்களுடைய எழுத்துக்களைப் பார்த்து நான் மிகவும் பொறாமைப்படுகின்றேன். அல்லாஹ் சுப்ஹானவத்தஆலாவின் அன்பும் அருளும் ஆசியும் எங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இஸ்மாயில் ஹஸ்ரத்ஜீ அவர்களுடைய வாழ்வுபோல் இல்லாவிட்டாலும் அல்லாஹ்வுக்குப் பிடித்தமான விடயங்களை மாத்திரம் செய்து அவனது அன்பைப் பெறுவதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.