சிங்கள மொழி குர்ஆன் முழு நாட்டுக்கும், இஸ்லாம் தொடர்பான தெளிவுகளை வழங்கும் - முப்தி ரிஸ்வி
எமது நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வொன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்தது. அன்று சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியிட்டு வைக்கப்பட்டது.
அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பின் முதற்பிரதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தியினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் அல்குர்ஆன் மொழி பெயர்ப்பு பிரதி இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி,
‘முஸ்லிம்கள் தொடர்பாகவும், இஸ்லாம் தொடர்பாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளும், மோசமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றுக்கான தெளிவுகளையும் சரியான பதில்களையும் வழங்க வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களும், கல்விமான்களும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இந்தச் சவாலை ஏற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புனித அல்குர்ஆனின் சிங்கள மொழியிலான விளக்கவுரையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இலகு மொழிநடையில் மொழிபெயர்க்கும் பணியை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்து.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்த பொதுபல சேனா அமைப்பு குர்ஆனை நிந்தனை செய்தது. அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரர் குர்ஆன் தீவிரவாதத்தைப் போதித்திருப்பதாக சவால்விட்டார். அல்லாஹ்வையும், குர்ஆனையும், நபிகள் (ஸல்) அவர்களையும் நிந்தித்தார். குர்ஆன் தொடர்பான விளக்கங்களை உலமா சபை ஞானசாரதேரருக்கு ஏற்கனவே வழங்கியிருக்கிறது. அவரது சந்தேகங்களுக்கு தெளிவு வழங்கியிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குர்ஆன் விளக்கவுரை சிங்கள மொழியில் வெளியீடு செய்ததன் மூலம் இஸ்லாம், தொடர்பான சந்தேகங்களுக்கு விடுதலையளிக்கப்பட்டுள்ளது.
‘சிங்கள மொழி மூலமான குர்ஆன் விளக்கவுரை முழு நாட்டு மக்களுக்கும் இஸ்லாம் தொடர்பான தெளிவுகளை வழங்கும் என நம்புகிறோம்’
முஸ்லிம்களின் தாய்நாடு இலங்கையே. இந்நாட்டு முஸ்லிம்கள் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மக்களுடன் கைகோர்த்து ஒரேதாயின் பிள்ளைகளைப் போன்று வாழ்கிறார்கள். இதனையே அல்குர்ஆனும் போதித்துள்ளது. இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அதிகமான முஸ்லிம்கள் சிங்கள மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள்.
இன்று வெளியிட்டு வைக்கப்படும் சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் பாலமாக அமையும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், ‘சிங்களமொழியை அரச மொழியாகக் கொண்டுள்ள ஒரே நாடு இலங்கையாகும். அல்குர்ஆன் மனித சமுதாயத்திற்கான வழிகாட்டியாகும். அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரித்தானதல்ல, முழு சமுதாயத்துக்கும் உரித்தானதாகும். அல்குர்ஆன் மனித உரிமை பற்றிப் பேசுகிறது. ஏனைய மதங்களை கௌரவிக்கும்படி கூறியுள்ளது. அடுத்தவர்களைத் துன்பத்துக்கு உள்ளாக்காதீர்கள் என்கிறது. எதிரிகளுக்கும் உதவி செய்யும்படி கூறியுள்ளது. நல்லதையே செய்யும்படியே குர்ஆன் போதிக்கிறது. இது அல்லாஹ்வின் போதனைகளாகும்.
குர்ஆனைப் பற்றிய பொய்ப் பிரசாரங்களினாலும், முஸ்லிம்களைப் பற்றிய தவறான கருத்துக்களாலும் இந்நாட்டில் முஸ்லிம்கள் பல சவால்களை எதிர்கொண்டார்கள். குர்ஆனைப் பற்றிய புரிதல் இன்மையே இதற்குக் காரணமாகும். குர்ஆனைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காக, குர்ஆனின் போதனைகளை விபரிப்பதற்காகவே சிங்கள மொழி பெயர்ப்பு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இம்மொழி பெயர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டினையும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Alhamdhulillah !
ReplyDelete