Header Ads



எகிப்து அரபு மொழி ஆசிரியர் கைது, மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் விளக்கம்

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் அரபு மொழி ஆசிரியராகக் கடமையாற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்த அஷ்ரப் அப்துல் பத்தாஹ் ஸித்தீக் முஹம்மத் என்பவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சில ஊடகங்கள் பிழையான தகவல்களைப் பரப்பியதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

1960 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இலங்கையிலுள்ள கல்வி நிலையங்களில் அரபு மொழி கற்பிப்பதற்காக எகிப்து அரசாங்கத்தின் மூலம் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்திலிருந்து ஆசிரியர்கள் அனுப்பப்படுவது வழமை. இது இருநாடுகளுக்குமிடையிலான நல்லுறவின் அடையாளமாக இடம்பெற்று வந்துள்ளது.

அந்த வகையில் மேற்கூறப்பட்ட ஆசிரியர் 18.1.2018 அன்று முஸ்லிம் சமய கலாச்சாரத்திணைக்களத்தினால் எமது கல்லூரிக்கும் அனுப்பப்பட்டார். பொலிஸார் நேற்று (24.04.2019) எமது கல்லூரிக்கு விஜயம் செய்த போது அவரது கடவுச்சீட்டு அவரிடம் இருக்கவில்லை. அது விஸா நீடிப்புக்காக 20.02.2019 திகதி முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தினூடாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டிருந்தது. இது பற்றிய ஏனைய ஆவணங்களை காண்பித்த போதும் கடவுச் சீட்டோ வீஸாவோ கையில் இல்லை என்ற காரணத்தைக் கூறி அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இது குறித்து உடனடியாக முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்துக்கும் எகிப்திய தூதுவராலயத்துக்கும், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கும் அறிவிக்கப்பட்டது. குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் உடனடியாகத் தனது விளக்கத்தை மாதம்பை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குக் கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.

அதில் மேற்குறித்த எகிப்து நாட்டவரின் விஸா நீடிப்பதற்கான விண்ணப்பம் தனது அலுவலகத்திற்கு 20.02.20019ல் கிடைக்கப்பெற்றதாகவும் விஸா வழங்குவதற்கான அரச புலனாய்வுச் சேவை (State Intelligence Service) அங்கீகாரம் 08.04.2019 அன்று கிடைத்ததாகவும் மற்றும் தபால், தபால் சேவை, மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் சிபாரிசு 24.04.2019 இல் கிடைக்கப் பெற்றதாகவும் உரிய கட்டணங்களைச் செலுத்தியதும் இன்றைய தினம் (25.04.2019) விஸா நீடிப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இன்று -25- காலை அவரது விஸா பதிக்கப்பட்ட கடவுச்சீட்டு முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகளிடம் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

உண்மை இவ்வாறு இருக்க இவ்வியடமாக எதுவித தகவல்களும் எம்மிடமோ அல்லது சம்மந்தப்பட்ட எவரிடமும் பெறாமல் ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்பட்டு பொதுமக்களைப் பிழையாக வழிநடாத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவதை வன்மையாக கண்டிப்பதோடு இத்தகைய செயல்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

இப்படிக்கு.

M.Z.M. நவ்ஸர் BA (Hons), MA
செயலாளர்

-- 
As Sheikh A.A.M. Saadiq Islahi, BA (Cey), MBA (UK) 
Manager,
ISLAHIYYAH ARABIC COLLEGE,
Madampe.

1 comment:

  1. Send this letter to all Sri Lankan media outlets in Sinhala and English translation.

    ReplyDelete

Powered by Blogger.