Header Ads



நாட்டு மக்களுக்கு, மத்தியவங்கியின் முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் அவர்களது பிணையக் கணக்குகளில் கொடுக்கல், வாங்கல் இடம்பெற்றதற்கான அறிவுறுத்தல்களை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அரச பிணையங்களின் முதலீட்டாளர்களின் (லங்காசெக்குயர் முறைமையின் வாடிக்கையாளர்கள்) விழிப்புணர்வினை மேம்படுத்தும் பொருட்டு மற்றும் முதலீடுகளுக்கு மேலுமொரு சிறப்பியல்பினை அறிமுகப்படுத்தும் முகமாகவும், லங்காசெக்குயர் முறைமையை நடைமுறைப்படுத்தி பராமரிக்கும் இலங்கை மத்திய வங்கியானது குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் மூல எச்சரிக்கை சேவையினை 2019 மாச்சு 25 முதல் நடைமுறைப்படுத்தியது. 

வாடிக்கையாளர்களின் பிணையக் கணக்குகளில் இடம்பெறும் பத்திரங்களற்ற பிணையங்களின் ஒவ்வொரு அசைவின் அதேநேர அறிவித்தல்கள், குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் எச்சரிக்கையின் மூலமாக, அரச பிணையங்களின் முதலீட்டாளர்களுக்கு இச்சேவையின் மூலம் வழங்கப்படுகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் அவர்களது பிணையக் கணக்குகளில் கொடுக்கல்வாங்கல் இடம்பெற்றதற்கான அறிவுறுத்தல்களை ('லங்காசெக்குயர்" இலிருந்து குறுஞ்செய்தி மற்றும் 'reply@cbsl.lk" இலிருந்து மின்னஞ்சல்) உடனடியாகப் பெற்றுக்கொள்வர்  என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்/ முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கிணங்க, அதேநேர அறிவித்தல்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது இரண்டின் மூலமாகவோ வழங்கப்படும். இவ்வெச்சரிக்கை சேவையினைச் செயற்படுத்துவதற்கு, காப்பாளர் நிறுவனங்கள் (உரிமம்பெற்ற வணிக வங்கிகள் அல்லது முதனிலை வணிகர்கள்) வாடிக்கையாளர்/ முதலீட்டாளர் அறிவித்தல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் முறைமையினை அவர்களது தொடர்புடைய தொடர்பு விபரங்களை லங்காசெக்குயர் முறைமையில் பதிவுசெய்தல் வேண்டும். 

இக்குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் எச்சரிக்கை சேவையில் உங்கள் பதிவினை உறுதிசெய்து கொள்வதற்கு, வாடிக்கையாளர்கள் தங்களது காப்பாளர் நிறுவனத்தினைத் தொடர்புகொண்டு அறிவித்தல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் முறைமையினை எழுத்து மூலமாக உறுதிப்படுத்துவதுடன் தொடர்பு விபரங்கள் கீழ் குறிப்பிட்டவாறு வழங்குதல் வேண்டும்  என மத்திய வங்கி அறிவித்துள்ளது

வாடிக்கையாளர் மின்னஞ்சல் மூலமான எச்சரிக்கையினை பெற்றுக்கொள்ள செல்லுபடியாகக்கூடிய மின்னஞ்சல் முகவரி, வாடிக்கையாளர் குறுஞ்செய்தி மூலமான எச்சரிக்கையினை பெற்றுக்கொள்ள செல்லுபடியாகக்கூடிய செல்லிடத் தொலைபேசி இலக்கம் அல்லது வாடிக்கையாளர் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமான எச்சரிக்கையினைப் பெற்றுக்கொள்ள செல்லுபடியாக்கக்கூடிய மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடத் தொலைபேசி இலக்கத்தினை வழங்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள், இவ்வெச்சரிக்கைகளின் உள்ளடக்கங்கள் வாடிக்கையாளர்கள், காப்பாளர் நிறுவனங்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் வாடிக்கையாளர் மற்றும் காப்பாளர் நிறுவனத்திற்கிடையிலான ஒப்பந்தங்களுக்கு அமைவாக உள்ளதனை உறுதிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இக்குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் மூலமான எச்சரிக்கை வசதியானது, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் வழமையான அச்சிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதேநேர பார்வையிடக்கூடிய வசதி என்பவற்றுக்கு மேலதிகமாக வழங்கப்படும் சேவையாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.