Header Ads



தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின், மூத்த சகோதரர் கைது

Colombo(News 1st) 

 கொழும்பு ஷங்கிரில்லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தியவர்களின் மூத்த சகோதரர், தெமட்டகொட – மஹவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்களின் தந்தையும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பாதுகாப்புத் தரப்பினரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கை தலைமையக அதிகாரிகள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பிரிவினர் தெமட்டகொடையில் குண்டுவெடித்த வீட்டுக்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன்போது, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இர்பான் என்ற சந்தேகநபர் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, இரண்டு வாள்கள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியமை, இஸ்லாம் கடும்போக்குவாத செயற்பாடுகளில் ஈடுபட்டமை, பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகபரின் சகோதர்களான மொஹமட் இப்ரஹீம் மொஹமட் இல்ஹாம் அஹமட் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இன்பாஸ் அஹமட் ஆகியோர் கடந்த வாரம் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

குறித்த இந்தக் குடும்பத்தில் 9 பிள்ளைகள் இருப்பதுடன் அவர்களில் 6 பேர் ஆண்கள் என பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.