Header Ads



குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட குழு, சிறியதாக, இருந்தாலும் சர்வதேச பயங்கரவாத தொடர்பு உள்ளது


நாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின்  சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும்  அதேபோல் இராணுவத்திற்கு  உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென  இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார். 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட குழு சிறிய குழுவாக இருந்தாலும் இவர்களுக்கு சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

இராணுவத் தளபதி  மகேஷ் சேனாநாயக இன்று கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். நேற்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்  பலியாகிய பொதுமக்கள் குறித்தும் தமது அனுதாபங்களை இராணுவத்தளபதி தெரிவித்ததுடன் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். 

இராணுவத்தளபதி என்ற வகையில் எனது கருத்து என்னவென்றால் தற்காலிகமாக சிறிது காலத்திற்கு என்றாலும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் சந்தேக நபர்களை கைதுசெய்யும் அதிகாரமும் எமக்கு வழங்கப்பட வேண்டும். வேறு எவரதும் தலையீடுகள் ஏற்பட முன்னர் எமக்கு சந்தேக நபர்களை கைதுசெய்யும் அதிகாரம் தற்காலிகமாகவேணும் வழங்கப்பட வேண்டும். எமக்கு அதிகாரம் இல்லாமையும் எமக்கு கிடைக்கும் தகவலை நாம் வேறு ஒருவருக்கு பகிரவேண்டிய நிலைமை உள்ளது அவர்கள் தான் இதனை செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இருக்கின்றமையே  இதற்குக் காரணமாகும். 

அதேபோல் இந்த தொடர்குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட குழு ஒரு சிறிய குழுவாக இருந்தாலும் கூட இவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் பயன்படுத்திய வெடிபொருட்கள் குறித்து பார்க்கையில் இவர்கள் இங்கேயே பயிற்ச்சிகளை பெற்றிருக்கவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கான நிதி உதவிகள் சர்வதேசத்திடம் இருந்து கிடைத்திருக்கும் என்ற வாய்ப்புகள் உள்ளது என்றார். 

No comments

Powered by Blogger.