முஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது - ரணில்
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
என்டீரிவிக்கு (NDTV) நேற்று (23) வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தகவல்களை பரிமாறிக் கொள்வதில் நிலவிய சிக்கல் தொடர்பில் அதிகாரிகள் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளதாகவும், தற்போது தீவிரவாதிகளை கைது செய்யவும் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"இதுவரை இலங்கையர்களுடன் தொடர்புடைய அமைப்பு ஒன்று சர்வதேச அமைப்பு ஒன்றுடன் தொடர்பினை வைத்துள்ளது. இந்த தொடர்புகளை கண்டறிவதற்காக சில வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியையும் நாங்கள் நாடியுள்ளோம்" என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"எங்களுக்கு இந்திய புலனாய்வு பிரிவினருடன் நல்ல தொடர்புகள் உண்டு. அவர்கள் நமக்கு தேவையான உதவிகளை வழங்குகிறார்கள். அதுபோல அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திடம் இருந்தும் எங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன" என்று பிரதமர் கூறினார்.
நியூசிலாந்து, கிறிஸ்ட் சேர்ச்சில் மசூதியில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இது அமைகிறதா என சந்தேகம் கொள்ள வைத்தாலும், குறித்த சம்பவத்திற்கு முன்னர் இந்த தாக்குதல்கள் திட்டமிடப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
´´புலிகள் அமைப்பினரால் நடாத்தப்பட்ட யுத்தம் போன்ற இது இல்லை, இது விடுதலைப் புலிகளிலிடம் இருந்து வேறுபட்டது´´ என்றும் "இது முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறாத ஒரு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்" பிரதமர் குறிப்பிட்டார்.
´´இந்த தாக்குதல்கள் சம்பவங்களால் இலங்கையர்களின் ஒற்றுமை பாதிக்காது எனவும், சில பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது, ஆனால் இது போன்ற சூழ்நிலையில் இது இயற்கையானது. நாங்கள் அதை சமாளிக்க வேண்டும்´´ எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment