Header Ads



மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இடமில்லை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாம் அவசரப்படக்கூடாது

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்த கட்சியும் முடிவெடுக்கவில்லை. இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இழுபறி தொடர்கின்றதாக செய்திகள் வருகின்றன.

இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன?' என்று சர்வதேச ஊடகமொன்றின் கொழும்பு செய்தியாளர் ஜனாதிபதியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் இது தொடர்பில் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் பேச்சு நடைபெற்றது.

எனினும், இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதற்காக இழுபறி தொடர்கின்றது எனக் கூற முடியாது. சிலவேளை பேச்சுத் தொடரக்கூடும்.

உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை நாம் எடுப்போம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை. எனவே, இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது.

இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள். நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம். மூவின மக்களும் நிம்மதியாக - நல்லிணக்கத்துடன் வாழும் ஆட்சியே தொடர வேண்டும். இதுவே எமது விருப்பம்.

நான்தான் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றேன். எமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நானே இறுதி முடிவெடுப்பேன்.

எமது கட்சி வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் நானே இறுதித் தீர்மானம் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.