பள்ளிவாசலை குண்டுவைத்து தகர்க்க, முயன்றவனுக்கு 4 வருட சிறை
இங்கிலாந்தில் சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக லண்டன் மசூதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த ஸ்டீவன் பிஷப் (41) வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் திகதியன்று பொலிஸார் நடத்திய சோதனையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்க உதவும் உபகரணங்களை கண்டுபிடித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் உள்ள Baitul Futuh மசூதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
முஸ்லீம் விரோதப் போக்கைத் தோற்றுவிக்கும் Brexit சார்பு குழுவுடன் சேர்ந்து ஆன்லைனில் பல கருத்துக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
மே 2017ம் ஆண்டு மான்செஸ்டர் அரினாவில், அரியானா கிராண்டே நடத்திய நிகழ்ச்சியில் 22 வயதான தீவிரவாதியால் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர்.
இதில் சாஃபி ருசோஸ் என்கிற 8 வயது சிறுமியும் பரிதாபமாக பலியாகினார். சிறுமியின் புகைப்படத்திற்கு கீழ் இரங்கல் தெரிவித்த ஸ்டீவன் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பதிவிட்டிருந்தான்.
அதைப்போலவே சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஸ்டீவன் வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Post a Comment