Header Ads



போதைப்பொருள் குற்றங்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் - ஜனாதிபதி

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். 

இதுபற்றி தான் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துதல், குற்றங்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைபுகள் தொடர்பாக இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நீண்டகாலம் செல்கின்றமை, போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பெரும் தடையாகவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமை விரைவில் சரி செய்யப்பட வேண்டுமென சுட்டிக் காட்டினார்

தற்போதுள்ள உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலேயே இந்த புதிய நீதிமன்றத்தையும் தாபிப்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக இன்று நாட்டின் அனைத்து மக்களும் கவனம் செலுத்தி இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முறைமைகளை திருத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக புனர்வாழ்வு அதிகார சபை ஒன்றை தாபிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியின் தலையீட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அதிகார சபையை தாபிக்கும் வரை குறித்த திட்டங்களை தயாரிப்பதற்கு நிர்வாக சபை ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி கேட்டறிந்தார்.

பாடசாலை மாணவர்கள் பாபுல் போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்ற நிலைமை அதிகரித்து வருவது பற்றியும் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், சட்ட ஏற்பாடுகள் இல்லாமை இதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் தடையாக உள்ளதாக பாடசாலை அதிபர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றில் இடம்பெறும் குற்றங்களை தடுப்பது குறித்தும் இதன்போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பாரதூரமான குற்றவாளிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பிலும் தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்டறியும் கலந்துரையாடல் ஒன்றை ஏப்ரல் மாதம் 02 திகதி தனது தலைமையில் மீண்டும் ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுதார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments

Powered by Blogger.