இந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன், ஏதும் பேசாமல் புன்னகைத்த அபிநந்தன்
பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.
விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிநந்தன் வருகையையடுத்து அமிர்தசரஸ் துணை போலீஸ் ஆணையர் ஷிவ் துளர் சிங் திலோன் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன் அபிநந்தன் என்ன கூறினார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், "அபிநந்தன் ஏதும் பேசவில்லை. புன்னகைத்தார். அவ்வளவுதான். நாடு திரும்பியதில் மகிழ்ச்சி என்றார். அவர் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது" என்றார்
"வாகா எல்லைக் கதவுகள் பொதுவாக மாலை 6 மணிக்கு மூடப்படும். ஆனால், இன்று அபிநந்தனின் வருகைக்காக இரவு வரை திறந்து வைக்கப்பட்டது. அவரை இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் அழைத்துச் சென்றுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்" என்றும் துளர் சிங் திலோன் கூறினார்.
விமானம் மூலம் அபிநந்தன் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் திலோன் குறிப்பிட்டார்.
அபிநந்தனை விடுவிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தியா கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment