Header Ads



வைத்தியசாலையிலிருந்து வெளியேறி, தனக்குத்தானே தீமூட்டிய நபர்


- பாறுக் ஷிஹான்  -

யாழ்ப்பாணம்   வடமராட்சி மந்திகை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே  இன்று (13) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்று வைத்தியசாலைக்கு அருகிலுள்ள இடத்தில் தனக்கு தானே தீ மூட்டி கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் காலை 7.45 மணியளவில் நடந்துள்ளதுடன் கொற்றாவத்தையை சேர்ந்த நாகலிங்கம் விஜயகாந்த் (வயது-33) என்பவரே தற்போது எரிந்த நிலையில் மீட்கப்பட்டவராவார்.இவ்வாறு  மீட்கப்பட்ட நபர்  வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று அருகிலுள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றி தனக்குத்தானே தீ மூட்டி உள்ளார்.

அவர் எரிந்த தகவல் சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு தெரிவிக்கப்பட்டபோதும் இது பொலிஸ் விசாரணைக்குரிய விடயம் என கூறி மந்திகை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் அவசர நோயாளர் காவு வண்டியை அனுப்ப மறுத்து விட்டது. பின்னர் 119 அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்ட வேளை  நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு மாற்றப்பட்டு அங்கிருந்த  நோயாளர் காவு வண்டி மூலம் தீ காயங்களுக்கு உள்ளானவர்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


No comments

Powered by Blogger.