புற்று நோயிலிருந்து விடுபட்டு, மீண்டும் களத்திற்குவந்த ரோமன் ரெய்ன்ஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு wwe மல்யுத்தப் போட்டியில் இருந்து பல மாதங்களாக சிகிச்சையில் இருந்த ரோமன் ரெய்ன்ஸ், தற்போது மீண்டும் போட்டிகளுக்கு திரும்பியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகளவில் மிகவும் பிரபலமான மல்யுத்த விளையாட்டு WWE. இந்த விளையாட்டில் தற்போதைய இளைய தலைமுறையினருக்கான ஹீரோவாக இருப்பவர் ரோமன் ரெய்ன்ஸ். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் திகதி தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியை தெரிவித்தார்.
அதாவது, தனக்கு லுகுமேனியா என்ற ஒரு வகையான புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்றும், அதிலிருந்து மீண்டு வந்து போட்டிகளில் பங்கேற்பேன் என்றும் அறிவித்திருந்தார். இதனால், அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் ரோமன் ரெய்ன்ஸுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
மேலும், ட்விட்டரில் #RomanReigns என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோமன் ரெய்ன்ஸ் மீண்டும் ரசிகர்கள் முன்பு தோன்றினார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் இதனை ஆரவாரமாக சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, இன்று ரிங்கிற்கு வந்த ரோமன் ரெய்ன்ஸ் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இருந்த ‘நாம் சண்டையிடுவோம், நாம் மீளுவோம், நம்பிக்கையோடு இருப்போம்’ என்ற வாசகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஆரம்பத்தில் கால்பந்து வீரராக இருந்த ரோமன், பின்னாளில் மல்யுத்தம் மீதான ஆர்வத்தில் wwe போட்டிகளில் பங்கேற்றார். 2014ஆம் ஆண்டு கலீனா பெக்கர் என்பவரை திருமணம் செய்த ரோமனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment