உடத்தலவின்னையில் வைத்திய முகாம்
- நஜீப் பின் கபூர் -
கண்டி - உடத்தலவின்ன மடிகே நேர்பர் நலன்புரிச் சங்கத்தினர் (UNWS நடாத்துகின்ற வருடாந்த வைத்திய முகம் இந்த முறையும் ஆறாவது தடவையாக உடத்தலவின்ன ஜாமியுள் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் அமைப்பின் தலைவர் எம். ரிப்கி முஸ்தாக் அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (24.03.2019) காலை 8 மணி முதல் பி.ப 3 மணி வரை நடைபெற இருக்கின்றது.
நாட்டில் முஸ்லிம் கிராமங்களில் மிகவும் வெற்றிகரமாக வழக்கமாக நடைபெறுகின்ற வைத்திய முகாம்களில் இந்த அமைப்பு நடாத்துக்கின்ற வைத்திய முகாம் முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தமுறை நடாத்தப்படுகின்ற வைத்திய முகாமில் இரத்ததான நிகழ்வு வழக்கம் போல் இடம் பெறவுள்ளது. கடந்த முறை நடாத்தப்பட்ட வைத்திய முகாமில் பலநூறு பேர் இரத்ததானம் செய்திருந்தமையும் ஆயிரக்கணக்கானவர்கள் வைத்திய முகாமிற்கு வந்து சிகிச்சை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த முறை நடாத்தப்படுகின்ற வைத்திய முகாமிற்கு மகப்பேற்று வைத்தியம், குழந்தை நேய்களுக்கான வைத்தியம், கண், மூக்கு, தொண்டை வைத்தியம் மற்றும் உடலியல் துறைகளுக்கான விசேட வைத்திய நிபுணர்கள் வருகைதரவுள்ளனர் என அமைப்பின் பொருலாளர் என்.பீ. மர்சூக் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட எம்பீபிஎஸ். வைத்தியர்களும் டசன் கணக்கான வைத்திய துறையைச் சார்ந்தவர்களும் இந்த முகாமிற்கு வருகை தரவுள்ளனர்.
இந்த முறை நடை பெறுகின்ற வைத்திய முகாமில் மார்புப் புற்று நோய், சிறு நீரகப் பரிசோதனை மற்றும் நீரிழிவு (சினீ) நோயாளிகளின் பாதப் பரிசோதனை என்பவைகளும் நடைபெறவுள்ளன.
இந்த வைத்திய முகாமில் கலந்து கொண்டுதவும் வைத்திய துறையைச் சார்ந்தவர்களுக்கு விசேட நினைவு சின்னங்களை வழங்க அகுரணை மேஷன் ஸ்டூடியோ உரிமையாளர் ஏ.சீ.எம். நௌசர் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அத்துடன் வழக்கம் போல் இந்த வைத்திய முகாமிற்கான மருந்துகளுக்கான அணுசரனையை றோயல் பார்மசி உரிமையாளர் அல்ஹாஜ் நியாஸ் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பின் செயலாளராக மிர்ஷா அஷ்ரஃப் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment