என் மகளுக்காகவும், எனக்காகவும் பிராத்தியுங்கள் - பள்ளிவாசல் தாக்குதலில் காயமடைந்தவரின் உருக்கமான வேண்டுகோள்
நியூசிலாந்து தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை ஒருவர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய மகளுக்காகவும் தனக்காகவும் பிராத்தனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் நேற்று கொடூரமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 49 பேர் பலியானதோடு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜோர்டான் நாட்டிலிருந்து நியூசிலாந்தில் வாழ்க்கையை துவங்குவதற்கான இடம்பெயர்ந்த வஸ்ஸி அல் சால்டி என்பவரும் இதில் படுகாயமடைந்துள்ளார்.
மசூதி அருகே முடிதிருத்தும் கடை வைத்திருந்த வஸ்ஸியின் முதுகு புறத்தில் இரண்டு குண்டுகளும், வயிறு மற்றும் கால் பகுதியில் இரண்டு என 4 குண்டுகள் அவருடைய உடலில் பாய்ந்துள்ளன.
அதேபோல அவருடைய மகளின் உடலிலும் 3 குண்டுகள் துளைத்துள்ளன. தாயுடன் ஆக்லாந்தில் ஸ்டார்ஷிப் குழந்தைகள் மருத்துவமனையில் வஸ்ஸியின் மகள் சிகிச்சை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நிலைமையில் முன்னேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் வஸ்ஸி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுடைய செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தவறவிடுவதற்கு மிகவும் வருந்துகிறேன். உங்கள் அனைவருக்கும் பதில் கொடுக்க கூடிய நிலையில் தற்போது இல்லை. நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.
தயவு செய்து எனக்காகவும் என்னுடைய மக்களுக்காகவும் பிராத்தனை செய்யுங்கள். அவள் நலமாக இருப்பாள் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், நான் நன்றாக இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இந்த வீடியோவினை வெளியிடுகிறேன். உங்கள் எல்லோருடைய ஆதரவிற்கும், இதுவரை செய்த உதவிகளுக்கும் நன்றி என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment