இரத்தினபுரியில் முதலாவது அல்ஆலிமா, அல்ஹாபிழா பட்டமளிப்பு விழா
எம்.எல்.எஸ்.முஹம்மத்
இரத்தினபுரி அய்னுஸ் ஷரபா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா அதன் அதிபர் அஷ்ஷேய்ஹ்.தில்ஷாத் முப்தியின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இன்று(10) இடம்பெற்றது.
கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரி கொடிகமுவ பகுதியில் பல சவால்களுக்கு மத்தியில் மிகக் குறைந்த பௌதிக வளங்களுடனும், ஒருசில மாணவிகளுடனும் பகுதி நேர மற்றும் முழு நேர இஸ்லாமியப் பாடநெறிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியான அய்னுஸ் ஷரபா அரபுக்கல்லூரியிலிருந்து 5 வருட இஸ்லாமிய சரீஆ முழு நேர பாடநெறியை நிறைவு செய்த 5 அல்ஆலிமாக்களும் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த 4 அல்ஹாபிழாக்களும் இன்று ஷரபிய்யா பட்டம் பெற்றுக்கொண்டனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் பிரதம பேச்சாளராக நிந்தவூர் முஅஸ்ஸஸா றப்பானிய்யா மற்றும் பாத்திமா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்ஹ் ஏ.ஏ.அலி அஹமத் றஷாதி மற்றும் கௌரவ அதிதிகளாக பலாங்கொடை அய்னுல் ஹுதா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேய்ஹ் முஹம்மத் முஸாதிக் மற்றும் பல அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் இரத்தினபுரி பிரதேச ஆலிம்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இரத்தினபுரி பிரதேச முஸ்லிம் வாலிப அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பிரதேச முஸ்லிம் தனவந்தர்களின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற இவ்விழாவில் கல்லூரியின் உருவாக்கத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் மற்றும் அதன் தொடர்ச்சியான வெற்றிக்காகவும் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அதிபர் தில்ஷாத் முப்தி இதன் போது நன்றி தெரிவித்துள்ளார்.
MashaAllah.
ReplyDelete