எந்த பாராளுமன்ற உறுப்பினரையும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது எனக்குரிய விடயமல்ல
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் மா அதிபர் தன்னிடம் அறிவித்துள்ளார் எனவும் சபாநாயகர் இதன்போது அறிவித்துள்ளார்.
கொக்கேய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் எனத் தகவல் வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வினவியபோது பதிலளித்த சபாநாயகர், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது தமக்குரிய விடயமல்ல எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment