Header Ads



மதுஷ் வடித்த இரங்கற்பா, டுபாயில் ஒவ்வொரு கிழமையும் சந்திப்பு - ரிப்போர்ட் - 29

மாக்கந்துர மதுஷின் சகா கெலுமாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதே ஒரு சி டி...

அந்த சி டியில் இருந்தே இப்போது விபரங்கள் பெறப்பட்டு மதுஷின் நெருக்கமான ஆட்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .அப்படி சிக்கியவர்களில் ஒருவர் தான் பெங்கிரிவத்தே சுத்தா ...

இவர்தான் மாக்கந்துர மதுஷின் தந்தையார் மரணத்தின் இறுதிக்கிரியையின்போது முழு செலவையும் கவனித்தவர். ஹெலியில் இருந்து பூக்களை சொரிந்தது முதல் நேரடி ஒளிபரப்பை செய்து மதுஷுக்கு அதனை பார்வையிட வைத்தது - வாகனம் சாப்பாடு மற்றும் இதர அனைத்து செலவுகளையும் கவனித்தது இவர் தான் ..

மதுஷின் தந்தையார் 62 வயதுடைய சமரசிங்க ஆராச்சிலாகே லக்ஷ்மன் எனப்படும் லால் கடந்த 2018 செப்டெம்பர் 20 ஆம் திகதி விபத்துச் சம்பவமொன்றில் சிக்கி படுகாயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சரியாக ஒன்பது நாட்கள் கழித்து 29 ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இறக்கும் வரை இவர் யாரென தெரியாமல் இருந்தாலும் மாக்கந்துர பகுதிக்கு இவரது உடல் எடுத்துவரப்பட்டதும் பொலிஸ் அலெர்ட் ஆகியது .அதன் பின்னரே மதுஷின் சகாக்கள் மற்றும் நட்புக்கள் அங்கு வர ஆரம்பித்தன. தந்தையாரின் பெயரில் ஊர் விகாரைக்கு மண்டபம் ஒன்றும் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தின்போது மதுஷின் இரங்கல் அறிக்கையும் ஒருவரால் வாசிக்கப்பட்டது. அத்துடன் மதுஸ் அனுப்பிய இரங்கற்பா அங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது .

''தந்தையே என் தம்பியை கொன்ற கயவர்களை விடமாட்டேன்...அவர்களை பின் தொடர்வேன்.. உங்களின் இரத்தத்தில் கலந்துள்ள நான் அதனை செய்ய நீங்கள் எனக்கு மேலிருந்து வழிகாட்ட வேண்டும் '' என்று சுட்டுக்கொல்லப்பட்ட தனது தம்பியாரின் நினைவை அந்த இரங்கற் பாவில் எழுதி இருந்தார் மதுஷ் ..

ஆரம்ப காலத்தில் தந்தையுடன் மனஸ்தாபத்தில் இருந்தார் மதுஷ் .சிறு வயதில் தனது தாயாரை தனியே தவிக்க விட்டு சென்ற கோபம் தந்தை மீது மதுஷுக்கு இருந்தாலும் இறுதிக்காலங்களில் அவர் தந்தை மீது அன்பு காட்டி வந்தார்.

இந்த நிலையில் தந்தையின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள வரவிருந்த மதுஷ் பாதுகாப்பு படையினர் தன்னை கைது செய்யலாம் என்ற அச்சம் காரணமாக வருகையை தவிர்த்தார் என சொல்லப்படுகிறது .( மதுஷின் தந்தையாரின் பூதவுடலை தாங்கி அவரது சகாக்கள் செல்வது - ஹெலியில் பூக்கள் சொரிவது - மதுஷ் தந்தைக்கு அனுப்பிய இரங்கற்பா ஆகியவற்றின் படங்களை இணைத்துள்ளேன்)

மதுஷ் செய்யப்பட்ட கையோடு இந்த சி டி எல்லாம் எரிக்கப்பட்டன. ஆனால் கெலுமா தனது நினைவுக்கு வைத்திருந்த இந்த சி டி சிக்கியதால் இப்போது பலர் மாட்டியுள்ளனர்..

இப்போது என்ன நடக்கிறது ?

டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதுஷை அவரது இரண்டாவது மனைவி - அதாவது கொல்லப்பட்ட களு துஷாரவின் மனைவி ஒவ்வொரு ஞாயிறு தோறும் சிறைக்கு சென்று பார்வையிட்டு வருகின்றார்.கிடைத்த தகவல்களின்படி தனது பெரும் சாம்ராஜ்யமே இல்லாமற் போன பெரும் அதிர்ச்சியில் மதுஷ் இருப்பதாக தெரியவருகிறது.

சர்வதேச போதைப்பொருள் மாபியாவை பொறுத்தவரை அவர்கள் ஒரு தடவை பொலிஸிடம் சிக்கிய டீலர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது அதற்கான காரணம். அப்படி சிக்கியவர்கள் பொலிஸின் உளவாளிகளாக மாறிவிடலாம்..அல்லது அவர்களுடன் சேர்ந்து புதிய திட்டத்தை அமைத்து தங்களை இல்லாமல் செய்யலாம் - என்பனவே அதற்கான காரணங்களாகும்..

அதனால் அதிர்ச்சியில் உள்ள மதுஷ் தனது சகாக்கள் இலங்கையினுள் சிக்கியுள்ள காரணத்தினாலும் துயரத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பல இடங்களில் தனது பணத்தை முதலீட்டுள்ள மதுஷ் அதற்கு என்ன நடந்தது அவையெல்லாம் திருப்பிக் கிடைக்குமா என்பது குறித்தும் சிந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.

இதற்கிடையில் மதுஷின் சகா கெலுமாவின் வர்த்தக நடவடிக்கைகளில் தொடர்பில் இருந்த பெண் நூலகர் ஒருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.இந்த கைதுகளுக்கு பின்னர் அந்த நூலகர் தலைமறைவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் மதுஷின் உதவியுடன் டுபாயில் தனது பணத்தை முதலிட்ட பிரபல அரசியல்வாதி ஒருவர் குறித்தும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. Sivarajah-


No comments

Powered by Blogger.