இலங்கைக்குள் மதூஷை, இரகசியமாகவே கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது - குழப்பியடித்தது யார்...?
விடுதலைப் புலிகளின் முக்கிய நபரான கே.பியை எவ்வாறு நீதிமன்ற, பொலிஸ் தலையீடில்லாது நாட்டுக்கு வரவழைக்க முடிந்ததோ அதுபோன்றே மதூஷையும் இரகசியமாக நாட்டுக்கு கொண்டுவரத் திட்டம் வகுக்கப்பட்டது. எனினும் ஊடகங்களின் தகவல் பரவல் மூலமாகவே மதூஷின் இலங்கை வலையமைப்பை முற்றாக முடக்கும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ள நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ள இந்த ஏழு பேரையும் தேடி இவ்விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 9 பேரைத் தேடி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சூரியவெவயில் வைத்து கெசா எனும் அசேல எரங்க, சுசந்தகுமார ஆகிய இருவர் தங்காலை குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் பாதாள உலக தடுப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், ஹெரோயின் என்பனவும் கைப்பற்றப்பட்டன. இந் நிலையிலேயே தென் மாகாணத்தில் மதூஷுக்கு மிக நெருக்கமான மேலும் 7 பேரைத் தேடி விசாரணை தொடர்வதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலக தகவல்கள் சுட்டிக்காட்டின.
குறிப்பாக நேற்று மாலை வரை தென் மற்றும் மேல் மாகாணங்களில், மதூஷ் வலையமைப்புடன் தொடர்புள்ள 12 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
தேடப்படும் தெற்கின் ஏழு பேரும் தற்போது இருப்பிடங்களை விட்டுத் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸ் அதிரடிப் படை, திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவுடன் இணைந்து விசாரணைகளை தென் மாகாணத்தின் சிறப்பு பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்துள்ளன.
இதனிடையே மதூஷின் சகாக்களுக்கு மேலதிகமாக தற்போது டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அங்கொட லொக்கா எனும் பாதாள உலகத் தலைவரின் சகாக்களுக்குள் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கொட லொக்காவின் சகா ஒருவர் நேற்று பத்தரமுல்லையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைவாக மோட்டார் வாகனமொன்றில் பயணிக்கும்போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 40 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் இதன்போது மீட்கப்பட்டதாகக் கூறிய பொலிசார், அவரை மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான விஷேட விசாரணைப் பிரிவினரிடம் கையளித்ததாகக் கூறினர்.
கடந்த 5 ஆம் திகதி அதிகாலை மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட பாதாள உலக கும்பல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைதானதைத் தொடர்ந்து, மதூஷ் மற்றும் மதூஷின் சார்பிலான பாதாள உலக கும்பல்களை வேட்டையாடும் நடவடிக்கைகளும், மதூஷுடன் கைகோர்த்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் ஆரம்பமாகின. இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி மாலை அமீரகத்தில் மதூஷுடன் கைதான பாடகர் அமல் பெரேரா மற்றும் நாடக நடிகர் ரயன் வேன் ரொயன் ஆகியோரின் வீடுகள் பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதிரடிப் படைக் கட்டளைத் தளபதியும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான எம்.ஆர். லத்தீபின் உத்தரவுக்கமைய இந்த சோதனைகள் மஹரகம மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பாடகர் அமல் பெரேராவின் மஹரகம வீட்டிலிருந்து கொக்கைன் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு வகை உபகரணம் மற்றும் வெற்று கொக்கைன் பக்கற்றுக்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் அவரது சகோதரரை பொலிசார் விசாரித்த நிலையில் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.
Post a Comment