Header Ads



ஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து, சென்னைக்கு தொடருந்து பயணம்

- கி.தவசீலன் -

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த சேவையின் மூலம் சென்னைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இடையில், ஒரே பயணச் சீட்டின் மூலம் தொடருந்துப் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடருந்து சேவையை ஆரம்பிக்க முடியும் என்றும்,  இது சிறிலங்காவின் பௌத்த யாத்திரிகர்கள் குறைந்த கட்டணங்களில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் சிறிலங்கா போக்குவரத்து அமைச்சு, நம்புவதாக பிரதமர் செயலக அறிக்கை கூறுகிறது.

அதேவேளை, தென்னிந்தியாவுக்கும்,  காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கும் இடையில்,  கடல்வழிப் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் காங்கேசன்துறை  இறங்குதுறை புனரமைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை இறங்குதுறை 167 மீற்றர் நீளத்தையும், 22 மீற்றர் அகலத்தையும் கொண்டதாக விரிவுபடுத்தப்படவுள்ளது. அலைத் தடுப்பு அணையும் புதிதாக அமைக்கப்படவுள்ளது.

இதற்காக இந்தியா 45.27 மில்லியன் டொலரை கடனாக வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிகமாக, பழைய சீமெந்து தொழிற்சாலை இருந்த இடத்தில், புதிதாக கைத்தொழில் வலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன், தலைமன்னார் இறங்குதுறை அருகே, விடுதிகள், உணவகங்கள், களஞ்சியசாலைகளும் கட்டப்படவுள்ளன.

1 comment:

Powered by Blogger.