Header Ads



பொய்யை கூறிய ரணிலை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் தண்டனை வழங்குவார்கள் - கோத்தபாய

எமது இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை, இறுதிப்போரில் மனிதத் தன்மையுடன் தமது உயிரை அர்ப்பணித்து தமிழ் மக்களை மீட்டெடுத்தார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தினரும் போர்க்குற்றம் புரிந்தனர் என்று வடக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாபெரும் பொய் ஒன்றைச் சொல்லியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குகளை தம்வசப்படுத்தவே இந்த பொய்யை கூறியுள்ளார். ஆனால், தெற்கில் உள்ள மக்கள் அவரை மன்னிக்கவே மாட்டார்கள்.

போரின் போது எமது இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் படங்களையும், விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களின் படங்களையும் வைத்து கொண்டு இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று புலம்பெயர் புலிகள் அமைப்பினர் கருத்து வெளியிடுகின்றனர்.

இதை சில நாடுகளும், சில சர்வதேச அமைப்புகளும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஜெனிவாவில் இலங்கை மீது போர்க்குற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது இவற்றை நியாயப்படுத்தும் வகையில் ரணிலும் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் மத்தியில் தனது அரசியல் இருப்பை தக்கவைக்கவே பிரதமர் பொய்யுரைக்கின்றார்.

இறுதிப் போரின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நான் இருந்தேன். எமது இராணுவத்தினர் எந்த சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்கள் மிகவும் நேர்மையுடன் நடந்தார்கள்.

போரின் நிறைவில் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிப் போராளிகளை எமது இராணுவத்தினர் பக்குவமாக எம்மிடம் ஒப்படைத்தார்கள்.

அந்தப் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வு வழங்கினோம். பின்னர் அவர்களை விடுதலை செய்து சமூகத்தில் இணைத்தோம்.

இந்த நிலையில், எமது இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்கும் வகையில் பிரதமர் செயற்படுகின்றார்.

இதற்கான தண்டனையை தேர்தலின் போது அவர் எதிர்நோக்குவார். தெற்கு மக்கள் ஒருபோதும் அவரை மன்னிக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.