மதுஷ் சகா கைது, மைத்துனரான ரத்தின தேரர் விடுவிக்க முயற்சி
மாத்தறையில் உள்ள மாகந்துரே மதுஷ் சகாவின் வீட்டை சோதனையிட்ட போது துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடைகளுடன் கைது செய்யப்பட்ட நபர், ஜனாதிபதியின் ஆலோசகரான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் மைத்துனர் எனக் கூறப்படுகிறது.
நந்தநாத என்ற இந்த நபர், அத்துரலியே ரதன தேரரின் அக்காவின் கணவர் எனவும் அவரை இரகசியமான முறையில் விடுவிக்க ரதன தேரர் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வருவதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துரலியே ரதன தேரர் போதைப் பொருளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், அவரது மைத்துனர் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தமை சம்பந்தமான தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் ரதன தேரரின் செயலாளர்களில் ஒருவரான நளிந்த லக்சான் என்பவர் எக்ஸ்டசி என்ற போதைப் பொருளை வரவழைத்த சம்பவம் தொடபில் விளக்கமறியலில் இருந்துள்ளார்.
மாகந்துரே மதுஷின் சகாக்களின் வீடுகளை விசேட அதிரடிப்படையினர் தற்போது சோதனையிட்டு வருகின்றனர்.
துபாயில் மதுஷூடன் கைது செய்யப்பட்ட ஜங்கா என்று அழைக்கப்படும் துபோஹேவாதுரகே அனுஷ் கௌசால் என்ற நபரின் மாத்தறையில் உள்ள வீட்டை சோதனையிட்ட போது, அங்குள் அலமாரி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் உட்பட இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் 9 இராணுவ சீருடைகள், 5 காமாண்டோ சீருடைகள், 2 இராணுவ தலைகவசங்கள், 2 இராணுவ இடைப்பட்டிகள், ரி.56 ரக துப்பாக்கி, அதற்கான 32 தோட்டக்கள், 37 ரவை கூடுகள், 5 சிம் அட்டைகள், ஒரு மடிக்கணனி என்பன அடங்குகின்றன. ஜிங்கா என்பவரின் சித்தப்பாவும் கைது செய்யப்பட்டார்.
விசேட அதிரடிப்படையினருடன் கங்கெதர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில பண்டார வழிநடத்தலில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.
மாகந்துரே மதுஷின் மற்றுமொரு சகாவான கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள சிவா என்பவரின் வீட்டிலும் நேற்று இரவு சோதனை நடத்தப்பட்டது. துபாயில் மதுஷூடன் கைது செய்யப்பட்ட தொலைக்காட்சி நடிகர் ரயன் பயன்படுத்தி வந்த வாகனத்தின் உரிமையாளரான இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
கும்புறுப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினரான சரித் என்பவரின் வீடு சோதனையிடப்பட்டது.
மாத்தறை மாலிம்பட பிரதேசத்தில் இயங்கி வந்த துப்பாக்கி செய்யும் பட்டறை ஒன்றையும் அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் மதுஷூக்கு மிகவும் நெருக்கமான நபர் எனக் கூறப்படும் ஒருவர் சூரியவெவ விஹாரகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி, 20 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை கொழும்பு மாதம்பிட்டி பகுதியிலும் மாகந்துரே மதுஷின் ஆதரவாளரான சாமர என்பவர், கைக்குண்டு மற்றும் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
இவ்வளவு ஆயுதங்களும் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் இருந்து ஷ்ரவண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அந்த இனத்தின் நலை என்னவாயிருந்திருக்கும்?
ReplyDelete