Header Ads



டுபாய் சம்பவத்தின் எதிரொலியாக, இலங்கையில் அதிரடி - முக்கிய நபர் கைது


பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினருடன், டுபாய் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைப் பாடகர் அமல் பெரேரா மற்றும் நடிகர் ரயன் ஆகியோரது வீடுகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால், நேற்று (07) இரவு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, அவர்கள் இருவரதும் சகோதரர்கள் கைது செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாடகர் அமல் பெ​ரேராவுக்குச் சொந்தமாக மஹாரகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு, இவ்வாறு சோதனையிடப்பட்ட போது, அங்கிருந்து, கொக்கேன் போதைப்பொருள் சுற்றக்கூடிய உறைகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ​அவரது சகோதரரிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், அவரை விடுவித்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, நடிகர் ரயனின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸ் அதிரடிப்படையினர், அங்கிருந்து, கொக்கேன் போதைப்பொருள் கொண்டுசெல்வதற்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும், இரகசிய பொக்கெட்டுகள் அடங்கிய பயணப் பையொன்றையும் சிறிய ரக டிஜிட்டல் தராசு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்தே, மேற்படி நடிகரின் சகோதரர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு இவர்களது வீடுகளிலிருந்து ​கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும், விசேட விசாரணைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.