ஜனாதிபதியின் கருத்து தவறானது - பதிலடி கொடுத்தார் சபாநாயகர்
அரசமைப்புப் பேரவையால் வழங்கப்படும் நியமனங்களின் போது, சிரேஷ்டத்துவம் கருதப்பட மாட்டாதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றைய தினம் (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்து தவறானதென, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று (07) தெரிவித்தார்.
இன்று முற்பகல், நாடாளுமன்றம் கூடியபோது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சிரேஷ்டத்துவத்தை மாத்திரம், உரிய தகுதியாகக் கருத வேண்டாமென்றே, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறிய சபாநாயகர், அரசமைப்புப் பேரவைக்கு வெளியே, நியமனங்களுக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்படுவது இல்லை என்றும் ஜனாதிபதியால் அனுப்பப்படும் பெயர்களில் சிறந்ததொன்றையே தாம் தெரிவு செய்வதாகவும் கூறினார்.
அரசமைப்புப் பேரவையானது, 12 பேர்களின் பெயர்களை நிராகரித்ததென ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து தவறானதென்றும் ஒரு நியமனத்துக்காக, 3 - 4 பெயர்கள் அனுப்பப்படும் போது, அவற்றில் ஒருவரது பெயரை மாத்திரமே தெரிவு செய்ய முடியுமென்றும் அவ்வாறான பெயர்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறுவது, அரசமைப்புக்குச் செய்யும் அநியாயமென்றும், சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய, அழுத்தங்களுக்கு அடிபணியாமல், உரியவர்களைத் தெரிவு செய்வதே தமது பணியென்றும் அதனைத் தான் சரியான முறையில் நிறைவேற்றி வருவதாகவும், சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment