Header Ads



பாகிஸ்தான் ராணுவம், என்னை மரியாதையாக நடத்துகிறது - பிடிபட்ட இந்திய விமானி தெரிவிப்பு

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது.

இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானி கைது செய்யப்பட்டது போல ஒரு காட்சி உள்ளது.

அவரது சீருடையில் ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தனது சர்வீஸ் எண்ணை கூறுவது போல அந்த காட்சியில் உள்ளது.

கைது செய்யப்பட்ட அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேசுவது போல ஒரு காணொளியும் வெளியாகி உள்ளது.

அதில் அந்த நபர், ஒரு கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் தன்னை மீட்டதாகக் கூறுகிறார்.

இந்த காட்சியின் உண்மைதன்மை குறித்து பிபிசி பரிசீலித்து உறுதி செய்யவில்லை.

அந்த காணொளியில் என்ன உள்ளது என்பதை மட்டும் இங்கே வழங்குகிறோம்.

அந்த காட்சியில் சாதாரண உடையில் தேநீர் கோப்பையுடன் அபிநந்தன் உள்ளார்.

தன்னை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாக கூறுகிறார்.

அவரிடம் அவரது இருப்பிடம் குறித்தும், ராணுவ இலக்கு குறித்தும் கேட்கிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் அவர், "என் இருப்பிடத்தைக் கூற எனக்கு அனுமதியில்லை. இந்தியாவின் தென் பகுதியை சேர்ந்தவன் தான் என்றும், இலக்கு குறித்து தாம் கூறமுடியாது" என்கிறார்.

இந்த சூழலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒரே ஒரு இந்திய விமானி மட்டுமே உள்ளதாகவும், ராணுவ நடைமுறைகளின்படி அவர் நடத்தப்படுவதாகவும் பகிர்ந்துள்ளார்.

No comments

Powered by Blogger.