Header Ads



7 முஸ்லிம் மாணவர்களின் கைதும், விடுதலையும் - எம்மை நாமே மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவை

- Nawas D -

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கிரலாகல தூபி விவகாரமாக கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையிருந்து விடுதலையான எமது பொறியியல் மாணவர்களுடனான தொடர் பயணத்தின் போது, எனக்குத் தெரிந்ததை  உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.

#மாணவர்களை போலிசார் கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும்போது மாணவர்கள் “குரல்கள் இயக்கத்தை” தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கையில் கைதாக வேண்டாம் என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.எனினும் மாணவர்கள் இதை ஆமோதித்ததாக தெரியவில்லை. இதன்பின்னரான நிகழ்வுகளில் இவ்வியக்கம் ஈடுபாடு காட்டியதாகவும் தெரியக்கிடைக்கவுமில்லை.எனினும் நீதிபதியின் தீர்ப்புக்கு பின்னர் தாம் நடவடிக்கைகளை தேவையெனில் மேற்கொள்ளவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

#பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஹொரப்பத்தான நோக்கி சென்று கொண்டிருக்கையில், அமைச்சர் அலி ஷாஹிர் மொளலானா அவர்களுக்கு தகவல் வழங்கப்படுகிறது. அனுராதபுர சீனியர் பிரதிமா பொலிஸ் அதிபரின் கைத்தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்தி மாணவர்களுக்காக பரிந்துரை செய்கிறார்.

#ஒரு சில நிமிடங்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் தகவல் கூறப்படுகின்றது. அவர் “தான் பொலிஸ்மா அதிபரையும்  அமைச்சர் சஜீத் பிரேமதாசவுடனும் இது பற்றி கூறுவதாக கூறுகிறார்.... (கூறினாரா இல்லையா என அறியக்கிடைக்கவில்லை. )

#அனுராதபுர பெரிய பள்ளிவாயல் நிர்வாகம் தம்மாலான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பெளத்த மத நிலையத்தினூடாக மேற்கொள்கின்றது.

#எனினும் மாணவர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கெதிரான தினிப்புக்கள் அதிகாரிகளுக்கிடையே அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

#அமைச்சர் சஜீத் பிரேமதாச தொல்பொருளியல் அவமதிப்பு விவகாரமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கடின தன்டனை கொடுக்கப்படுவதுடன் அது ஏனையவர்களுக்கு தகுந்த பாடமாக இருக்க வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு கருத்தை தெரிவிக்க அது சிங்கள ஊடகங்களில் விஸ்வரூபமடைகின்றது.

#பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களும், அனுராதபுர சிறைச்சாலைக்கு சென்று மாணவர்களை பார்வையிட்டதுடன் சிறைச்சாலை அதிகாரிகளிடம் மாணவர்களுக்கு எந்தவொரு தீங்குகளும் சக கைதிகளால் ஏற்படாமல் இருக்க பரிந்துரை செய்திருந்ததுடன் அமைச்சர் சஜீத் நிகழ்வொன்றுக்கு கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்தபோது மாணவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்கிறார்.

#அதே தினம் பிரபல சட்டத்தரணி ஷிராஷ் நூர்தீன் அவர்கள் இதுவொரு தனது சமூகத்திற்கு எதிரான கைது என்பதால் எவரும் கோரிக்கை வைக்காமலேயே  இக்கைதுக்கு எதிராக தான் எவ்வாறு பங்காற்ற முடியும் என அங்கலாய்த்தவராக சக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உட்பட  தனது ஜூனியர்களுடனும் வழக்கு தொடர்பான தொல்பொருளியல் பற்றிய குறிப்புக்களை திரட்டிக் கொள்ளத் துவங்கிளானார்.

#அமைச்சர் மொளலானா அவர்கள் தொல்பொருளியல் ஆணையாளுடனும் பரிந்துரை செய்கிறார்.

#முன்னாள் மாகாண சபை அமைச்சர் சுபைர் ஷரீப் அவர்கள்  ஜனாதிபதிக்கும் மனுவொன்றை ஒப்படைக்கின்றார்.

#அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனும் அமைச்சர் சஜீத் அவர்களை தொடர்பு கொண்டு இது பற்றி பரிந்துரை செய்ய இது மத விவகாரமானதால் தன்னால் ஏதும் செய்ய முடியாது எனக்கூறி நலுவிக் கொண்டார். இதனால் ரிசாத் அவர்கள் தனது சட்டத்தரணியான ருஷ்தி அவர்களிடம் இவ்விகாரத்தை கையாள மும்மொழிகின்றார்.

#கொழும்பு ஆளுனர் ஆசாத் சாலி அவர்களுக்கு விடயம் தெரிவிக்கப்பட அவரும் ஜனாதிபதியிடம் பரிந்துரைத்ததாக கூறியதுடன் உடனே ஜனாதிபதி இதுபற்றி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு அறிக்கை தருமாறு கூறியதாக தெரிவிக்கின்றார்.

#கடந்த 29ம் திகதி எமது சட்டத்தரணிகள் மாணவர்களை விடுவிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அதை நீதிபதி மறுக்க, மாணவர்களை பிணையில் விடுவிக்க மட்டும் பொலிசார் இணங்க. அதற்கு நீதிபதி மறுக்க .

எமது வழக்கறிஞர்கள் முறைப்பாட்டை வாபஸ்பெற பொலிசாரிடம் கோரிக்கை வைக்க அதை பொலிசார் மறுக்க,

இறுதியில் நீதிபதி அவர்கள்மாணவர்களை விடுவிப்பதற்கான ஏதுநிலைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்கும்படியும் எதிர்வரும் 5 ஆம் திகதி இதுதொடர்பில் மேற்கொண்டு ஆராய்ந்து பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அத்தறுணம் எந்தவொரு அரசியல் பரிந்துரைகளும் மாணவர்களுக்கு சார்பாக இருந்ததாக கருதமுடியவில்லை. எதிர்விளைவுகள் வலுவானதே தவிர.

#கொழும்பைச் சேர்ந்த வர்த்தகரும் சமூக ஆர்வலருமான சகோதரர் பயாஷ் அப்துல் ரஷாக் Fayas Abdul Razack அவர்களின் பங்களிப்பும் இங்கே நினைவு கூறப்படவேண்டியதொன்றாகும். சட்டத்தரணிகளுக்கு தேவையான முன்னகர்வுகளுக்கு தம்மாலான அணைத்து பங்களிப்புக்களையும் செய்து கொடுத்திருந்தனர்.

#இவரும் சென்ற ஒரு தினங்களுக்கு முன்னர் இறையடி சேர்ந்த மர்ஹூம்  தாவூஷ் அவர்களும் தம்மால் முடிந்த பங்களிப்புக்களை இம்மாணவர்களுக்காக  செய்ய வேண்டுமென முன்வந்திருந்ததுடன் மாணவர்களின் பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு தானும் எம்மாலான அணைத்துதவிகளையும் செய்ய எண்ணம் கொண்டுள்ளதாக கூறியதுடன் நில்லாது சட்டத்தரணி சிராஷ் நூர்தீன் அவர்களை தேடிச்சென்று விடயத்தை கூற சட்டத்தரணி சிராஷ் நூர்தீனும் இவ்வழக்கில் தான் ஆஜராக விருப்பம் கொள்வதாகவும் எனினும்  மாணவர்களின் எந்தவொரு பெற்றோரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை எனக்கூறவே பெற்றோர்களுடனான தொடர்புகள் மேற்கொள்ளப்படுகிறது. 

#சட்டத்தரணியுடனான பேச்சுவார்த்தைகளின் போது வழக்கின் விபரீதங்களை எடுத்துக் கூறி தாம் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத ஒன்றாகவே வழக்கை வாதாடுவது எனவும், நிச்சயமாக எதிராளியின் விவாதம் பலமாக இருக்குமென்பதுடன் மாணவர்களை சிறையில் கடூழிய தன்டனை பெற்றுத் தரவே எதிராளிகள் சமயோசிமாக சட்டத்தை கையாளுவார்கள் என  விளக்குகின்றார். எவ்வாறெனிலும் இறுதியாக இது தெரிந்தே செய்த குற்றம் என்ற போதிலும் அறியாமல் செய்த குற்றம் என்ற ரீதியில் இறுதி வாய்ப்பை பயன்படுத்தி சிறைத்தன்டனையில் இருந்து மாணவர்களை காப்பாற்றலாம் என எண்ணம் கொள்கின்றார்.

பெற்றோரும் இணக்கம் காணப்படவே களத்தில் சிராஷ் அவர்கள் நகர்வுகளை ஆரம்பிக்கின்றார். தேவையான அணைத்து தரவுகளையும் தேவையான இடத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றார்.

#தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த இரண்டு பெளத்த இன மாணவர்கள் சக மாணவர்களிடம் கையெழுத்து சேகரிப்பை செய்து ஜனாபதியிடம் ஒப்படைக்க தயாராகின்றனர். ( கொடுக்கப்பட்டதா இல்லையா என அறியக்கிடைக்கவில்லை)

#கிரிஷ்துவ பாதிரிமார்கள் குழுவொன்று மாணவர்களுக்கு சார்பாக குரல் கொடுக்க தயாராகின்றனர். எனினும் அதனால் இனவாதிகளினால் மாணவர்களுக்கெதிரான இருக்கம் அதிகமாகுமென்பதால் இரத்து செய்யப்படுகின்றது.

(அகில இலங்கை ஜம்மியதுல் உலமாசபை இக்கைதுக்கு எதிரான நகர்வுகள் எதையும் மேற்கொண்டதாக தெரியவில்லை )

# ஒரு சில பெளத்த பிக்குகளும் மாணவர்களுக்கு சார்பாக குரல்கள் கொடுக்க முன்வருகின்றனர்.

#அமைச்சர் ஹரீஷ் அவர்கள் தமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் இவ்விடயத்தை அமைச்சர் சஜீத் அல்லது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைக்கின்றார்.  அமைச்சர் ரவூப் அவர்களும் குறித்த பல்கலைக்கழகத்தில் இருந்து 40 மாணவர்களை அழைத்து வாருங்கள் என்கின்றார் பிரதமரிடம் செல்லலாம் என்றார்.எனினும் பிரதமரிடம் செல்லவுமில்லை.   

#ஆளூனர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஓரு சில மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் சென்று உதவிக்கரம் கோர அவரும் புராதன தொல் பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் "P.B மந்தவல " அவர்களை உடனடியாக  தொலைபேசியினுடாக தொடர்பு கொண்டு கலந்துரையாடினார். எனினும் ஆளுனர் அவர்கள் நீதிபதியின் தீர்ப்புக்கு முன்னர் இது விடயமாக ஜனாதிபதியிடம் கூறி பிரதிபலன்களை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற ஒன்று என கூறுகிறார்.

#இறுதியாக அமைச்சர் ரிஷாத் தனது சட்டத்தரணி ஒருவருடனும் இது பற்றி கூறியிருக்க அவரும் தான் ஏற்கனவே மாணவர்களுக்காக வாதாடவுள்ள சட்டத்தரணி  சிராஷ் நூர்தீன் அவர்கள் குழுவில் பங்காற்றி வருவதாக கூறியிருந்தார் .

#05ம் திகதி நீதிமன்றம் கூடுகின்றது.

கொழும்பில் இருந்து மாணவர்களுக்கு எதிராக விஷேட வழக்கறிஞர் குழுவொன்றும்  பிரவேசித்திருந்தனர்.

மாணவர்களுக்கு சிறைத்தண்டனை கொடுப்பதில் அவர்கள் துடியாய் துடித்தனர். குறைந்தது இரண்டு வருடமேனும் சிறையை அனுபவிக்க வைத்து மற்றையவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என வாதாடுகின்றனர். எதிராளியின் வாதமே ஓங்கிச் செல்கின்றது.

எமது வழக்கறிஞர் சிராஷ் அவர்கள் பெளத்த அவமதிப்பு பற்றி இனையத்தளங்களில் திரட்டியெடுத்த புத்தர் சிலையின் மடியில்  பெண்கள் அறைகுறையாடையுடன் உட்கார்ந்திரிந்த புகைப்படங்கள் உட்பட  தொல்பொருளியல அவமதிப்பு குறித்த பலரின் புகைப்படங்களை காண்பிக்கின்றார். இம்மாணவர்களை சிறையிலடைப்பதாயின் அவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்கிறார்.

நீதிபதியின் இருக்கம் குறைகிறது. விவாதம் தொடர்கின்றது.

எனினும் நீதிபதி சட்டபுத்தகத்தை உலாவி விட்டு அறியாமல் செய்ததொரு குற்றமே என்ற முடிவுக்கு வருகிறார்.

ஆக, மூன்று குற்றங்களும் அறியாமல் நடந்ததொன்றே என தீர்ப்பைக்கூறி தலா . ஆயிரம்+ஆயிரம்+ ஐம்பதாயிரம் ரூபாக்கள் என அபராதமாக செலுத்தக்கூறுகிறார்.

அத்துடன் மீண்டும் தன்னிடம் இருந்த சட்டபுத்தகத்தை ஒரு சில நொடிகள் உலாவி விட்டு இவ்வழக்கின் குற்றத்தை ஒப்புக்கொண்ட முறையானது எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார் .

அணைத்தையும் அறிந்த அல்லாஹ்( சுபுஹ்) விற்கே புகழும் நன்றிகளும் உரித்தானதொன்றாக இருக்கட்டும். 

குறிப்பு இவ்வழக்கிற்கு சட்டத்தரணிகள் எந்தவொரு சண்மானத்தையும் பெற்றிருக்கவில்லை.. இறைவனது சன்மானத்தை எதிர்பார்த்தே தவிர.

ஏக இறைவன் அவர்களது இச்சேவையை பொருந்திக்கொள்வானாக . ஆமீன்!

எனினும் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இம்மாணவர்களின் விடுதலைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவும் இல்லை.

கிடைக்கப்பெற்ற விடுதலையை விடுதலை என்ற முழுதையான கருத்துக்கு வரவும் முடியாது.

எமது சமூகங்களிடையே உள்ள சிவில் அமைப்புக்கள் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவும் இல்லை என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளதானது எம்மை நாமே மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவையுமாகும்.

1 comment:

Powered by Blogger.