Header Ads



ரவிராஜ் கொலைக்காக 5 கோடி, கருணாவுக்கு வழங்கப்பட்டது - நீதிமன்றத்தில் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கருணா தரப்பினருக்கு 5 கோடி ரூபாயை வழங்கியதாக புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் லியனாராச்சிகே அபயரத்ன , கொழும்பு மேல் நீதவான் திலின கமகே முன்னிலையில் வழங்கிய சாட்சியின் போது தெரிவித்துள்ளார்.

இந்த கொலையானது கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சியால் நடைபெற்றது எனவும். அதற்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சின் வசந்த என்பவர் ஊடாக கருணா தரப்புக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் இந்த கொலையானது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டூல் மற்றும் கருணா தரப்பு தெரிந்தே மேற்கொண்டது எனவும் அபயரத்ன கூறியுள்ளார்.

கொலை நடந்த பின்னர், கருணா தரப்புக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கொலையுடன் சம்பந்தப்பட்ட கருணா தரப்பை சேர்ந்தவர்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவிராஜ் கொலை சம்பந்தமான பதிவு செய்யப்படாத வழக்கு விசாரணை மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் நடைபெற்றதுடன் சிரேஷ்ட அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்கவின் நெறிப்படுத்தலில் அபயரத்ன சாட்சியமளித்துள்ளார்.

வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்த பதில் நீதவான், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ரவிராஜ் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த இலக்கம் 4 சாட்சியாளரான ஹென்ஜலோ ரோய் என்பவரை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.