Header Ads



மூதூரில் 1500 மாடுகள் உயிரிழப்பு, மக்களுக்கு பொருளாதார இழப்பு - நஷ்டஈடு வழங்கக் கோரிக்கை

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இற்றைவரை சுமார் 1,500க்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளன. இதனால் பண்ணை வளர்ப்பாளர்கள் பொருளாதார இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென   மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ. அரூஸ் தெரிவித்தார்.  

இது தொடர்பாக நேற்றுமுன்தினம் (26) கருத்துத் தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் ,மூதூர் பிரதேசத்தில் மாடுகள் அதிகளவில் உயிரிழப்பதற்கு மேய்ச்சல்தரை பிரச்சினை மற்றும் புளுத்தாக்கம் என்பன முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன.  

மாடுகளின் இறப்பு வீதத்தை தடுக்க வேண்டுமாக இருந்தால் இவ்விரண்டு பிரச்சினைக்குமான நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடில் மூதூர், தோப்பூர், சம்பூர் பகுதிகளில் எதிர்காலத்தில் மாடு வளர்ப்பானது கேள்விக்குறியாக மாறும் அபாயம் உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

மேலும், இறந்து கிடக்கும் மாடுகளால் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய அந்த மாடுகளை மூதூர் பிரதேச சபையின் பெக்கோ இயந்திரம், ஊழியர்களையும் கொண்டு அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.