Header Ads



"சோபித தேரரினால் அமைச்சர் பதவிகள் கிடைக்கப்பெற்றன என்பதனை பலரும் மறந்துவிட்டார்கள்"

மறைந்த சோபித தேரரினால் இன்றைய தினம் பலர் அமைச்சர்களாக பதவி வகிக்கின்றார்கள் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சோபித தேரரினால் அமைச்சர் பதவிகள் கிடைக்கப் பெற்றன என்பதனை பலரும் மறந்துவிட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தசாப்தங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்த நாம் , அமரர் மாதுலுவே சோபித தேரரின் கருணையினால் அமைச்சர்களாக பதவி வகிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு சோபித தேரரே காரணம் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

லுனுகம்வெஹர பிரதேசத்தில் சோபித தேரரின் பெயரில் வீடமைப்பு திட்டமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம், காவல்துறைத் திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு என்பன சுயாதீனமாக இயங்குவதற்கு உந்து சக்தியாக சோபித தேரர் திகழ்ந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அமைப்பினை மாற்ற முடியாது என பலர் கருதிய போது அதனை மாற்ற முடியும் என சோபித தேரர் நிரூபித்தார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.