Header Ads



ஜனாதிபதியை பகிரங்கமாக, விமர்சித்த நிமல் சிறிபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கேற்பச் செயற்பட்டதாலேயே, அண்மையில் ஜனாதிபதிக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருந்ததாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, சு.கவின் புதிய பொதுச்செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கேற்பச் செயற்படக் கூடாதெனக் கோரினார்.   

கொழும்பு - டார்லி வீதியில் அமைந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுதந்திரக் கட்சியானது, நெருக்கடியான சூழ்நிலையில் காணப்படுகின்ற தருவாயில், கட்சியின் பொதுச் செயலாளராக, தயாசிறி பதவியேற்றிருக்கிறார் எனவும் இந்தக் கட்சி, இரண்டாகப் பிளவுபட்டிருப்பதால், தயாசிறியின் பதவியேற்பு பற்றி மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை என்று கூறியதோடு, கட்சியை ஒன்றிணைக்கும் பாரிய பொறுப்பு, புதிய பொதுச் செயலாளருக்கு உள்ளதென்றார்.  

எதிர்வரும் தேர்தல்களில், ஐ.தே.கவை வீழ்த்துவதே மக்களின் விருப்பமென்றும் தொடர்ந்தும் தேர்தலைக் காலந்தாழ்த்தவே ஐ.தே.க முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எனினும் அதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.   

ஐ.தே.கவுக்கு எதிரான கட்சிகளை இணைத்துக்கொண்டு பாரிய கூட்டணி ஒன்றை அமைத்து, தேர்தலுக்கு முகங்கொடுப்பது இலகுவான காரியமல்ல என்பது தமக்குத் தெரியுமெனினும், இ​தனைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டுமென்றார்.

No comments

Powered by Blogger.