புதுமணத் தம்பதிகளுக்கு, ரஞ்சன் ராமநாயக்காவின் அறிவுரை
பழங்குடியின மக்கள் சமூகத்தைக் கொண்ட சுவாசிலாந்து முறைப்படி திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்சவிற்கு, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரோஹித்த ராஜபக்சவின் திருமண நிகழ்வு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் , ரோஹித்த – டடன்யா திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் தாம் வெளியிட்ட கருத்துக்கு இதுவரையில் மஹிந்த தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்படவில்லை எனவும் அதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளர்ர்.
அவர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள், மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலேயே அதிகளவில் நடைபெற்றுள்ளது. அர்ஜூன் அலோசியஸ் நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் நெருங்கிய நண்பராவார்.
அலோசியஸ், ரோஹித்த ராஜபக்சவிற்கு ரஸ்யன் ஷெபர்ட் என்னும் பெறுமதிவாய்ந்த நாய் குட்டியொன்றை வழங்கியுள்ளார்.
தேவாலயத்தில் நடைபெற்ற ரோஹித்தவின் திருமண நிகழ்வில் திரு, திருமதி அர்ஜுன் அலோசியஸ் பங்கேற்றிருந்தனர். நான் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.
அது குறித்த சீ.சீ.ரீ.வி காணொளிகள் உள்ளன அனைத்து ஆதாரங்களும் உண்டு, நான் சொல்வது பொய் என்றால் மஹிந்த தரப்பு அதனை ஏன் இதுவரையில் நிராகரிக்கவில்லை.
இந்த நாட்டின் ஏழை மக்கள் ஒரு தடவை திருமண நிகழ்வினை நடத்தே பல இடங்களில் கடன் பெற்று சிரமப்படுகின்றனர்.
மஹிந்தவின் புதல்வர் இந்து, கிறிஸ்தவ மற்றும் பௌத்த முறைப்பாடு மிகவும் பிரமாண்டமாக திருமண நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இன்னும் பஞ்சாபி, குரேசிய, ரஸ்ய, மொங்கோலிய, குஜராத்தீ உள்ளிட்ட பல்வேறு முறைகளிலும் திருமணம் நடைபெறும்.
எனினும், பழங்குடியின மக்கள் சமூகத்தைக் கொண்ட சுவாசிலாந்து முறைப்படி திருமண நிகழ்வினை செய்ய வேண்டாம் என கோருகின்றேன் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment