Header Ads



மொட்டில் இணைந்தவர்கள், இப்படிக்கூற இதுதான் காரணம்

நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் என்பதற்காக பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டவர்கள் தங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் எனக் கூறிவருகின்றார்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,

நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் என்பதற்காக பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டவர்கள் தங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் எனக் கூறிவருகின்றார்கள். இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் எவரும் உண்மையில் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தல் ஒன்றில் போட்டியிடப் போவதில்லையென பல இடங்களில் கூறியிருந்தனர்.

தேர்தல் ஒன்று வரும்போது இந்த வேறுபாடு தெளிவாக விளங்கப் போகின்றது. இப்போது பொது எதிரியை எதிர்ப்பதற்காக ஒன்று திரண்டுள்ளவர்கள் தேர்தல் ஒன்று வரும் போது தங்களுக்குள் எதிரியைத் தேடும் நிலைமை உருவாகும் என்பது மட்டும் உண்மையாகும்.

இதேவேளை, புதிய கட்சியை விட்டுவிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து இணைந்து கொண்டால் மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியைத் தோல்வியடையச் செய்யலாம்.

நாம் நாடாளுமன்றத்தில் எடுத்த தீர்மானத்தினால் எம்மிடம் இருந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்க வேண்டி வந்தது. நாம் எதிர்க் கட்சியில் அமர்ந்தால், ஏனைய அனைவரும் எம்முடன் வந்து அமர்ந்து கொள்வதாகவே முன்னர் கூறப்பட்டது.

இந்த வாக்கை நிறைவேற்றி அனைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் வந்து இணைந்து கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். புதிய கட்சிகளையல்ல நாம் நாடவேண்டியது. எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் ஆகும் என்றார்.

No comments

Powered by Blogger.