மைத்திரிக்கு மேலதிக அமைச்சுக்களை, விட்டுக்கொடுக்க முடியாது – ஐதேக போர்க்கொடி
எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சட்டம், ஒழுங்கு மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
“இந்த இரண்டு அமைச்சுக்களும் நிறைவேற்று அதிகார அதிபரிடம் அளிக்கப்பட்டால், அது மேலும் பல அரசியலமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடிகளை உருவாக்கும்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய, சிறிலங்கா அதிபர், பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சுக்களை மாத்திரமே வைத்திருக்க முடியும்.
எனவே, வேறெந்த அமைச்சையும் அவருக்கு கொடுக்க நாங்கள் இடமளிக்கமாட்டோம். ஏனென்றால் அது மேலும் பிரச்சினைகளை உருவாக்கும்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே அமைக்கப்படும். தேசிய அரசாங்கம் எதுவும் அமைக்கப்படாது. அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவே இருக்கும்.
இன்று அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறும். ஆனால் எப்போது பதவியேற்பு என்பதை சிறிலங்கா அதிபரே முடிவு செய்வார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment