ஏப்ரலில் இன்னுமொரு அரசியல் தளம்பல் இருக்கின்றது, இப்போது சொல்ல முடியாது - அமீர் அலி
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இன்னுமொரு அரசியல் தளம்பல் இருக்கின்றது என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சு பெற்றுக் கொண்டமைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வும், பொதுக் கூட்டமும் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் நேற்று மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக கல்குடாத் தொகுதியில் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து போதை ஒழிப்பு பிரகடனமாக கல்குடாவை வளப்படுத்தி நூறு வீதம் போதை இல்லாத பிரதேசமாக மாற்றுவதற்கான சத்தியத்தை எல்லோரும் செய்து கொள்ள வேண்டும்.
இதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்து செய்ய இருக்கின்றோம். இப்போது விசேட காலத்தில் விசேட அதிரடிப் படையினரை கொண்டு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். எதிர்காலத்தில் கடினமாகவும், அசிங்கமாகவும் இருக்கும் அதற்காக என்னை திட்ட வரக்கூடாது.
போதையோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் யாரும் என்னோடு பேச முடியாது. இதனை நீங்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அதிரடியாக சில நடவடிக்கைகளை நாங்கள் செய்ய இருக்கின்றோம்.
கல்குடாத் தொகுதியில் முப்பதாயிரம் ஏக்கர் விவசாயம் செய்யும் தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் நன்மை பெறும் வகையில் இரண்டு மாதங்களில் நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகம் திறந்து வைப்பதற்காக நான் அமைச்சு பதவியை ஏற்றதும் இதற்கான கையொப்பத்தினை இட்டு உங்கள் முன் பேசுகின்றேன்.
கல்குடாத் தொகுதியில் முப்பதாயிரம் ஏக்கர் விவசாய செய்யும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் இதனால் நன்மைபெறப் போகின்றது. இரண்டாவது கட்டமாக தண்ணீர் பிரச்சனைக்கான முனைப்பையும் எடுப்பேன். அடுத்த கட்டமாக எமது பகுதியில் பொருளாதாரத்தை தருகின்ற மீன்பிடி பிரச்சனையும் தீர்த்து வைக்கப்படும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இன்னுமொரு அரசியல் தளம்பல் இருக்கின்றது. அதனை நான் இப்போது விளக்கமாக சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம் வரவிருக்கின்ற அரசியல் தளம்பலிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதான இடமாக வகிபாகம் வகித்து மீண்டும் நிலைத்து நிறுத்தக் கூடிய நிலவரத்தை இறைவன் தருவான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார்.
Post a Comment