வெறுப்பு, பழிவாங்கல் வைராக்கியத்துடன் ஜனாதிபதி - நாம் அதை விமர்சித்தால் ரணில் தவறு என்கிறார்
நாட்டின் தலைவராக இருந்து கொண்டு ஜனாதிபதியால் பக்கச்சார்பாகவோ வைராக்கிய அரசியலிலோ ஈடுபட முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.அலரி மாளிகையில் இன்று -17- திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து எம்முடன் யாரேனும் இணைவதாக இருந்தால் அது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து கட்சிக் குழு கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானத்தினடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும்.
சில சந்தர்ப்பங்களில் நாம் ஜனாதிபதியை விமர்சிக்கும் போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது தவறு என எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி அவ்வாறு தனது தனிப்பட்ட வெறுப்பு, பழிவாங்கல், வைராக்கியத்தை தனது உரையில் வெளிப்படுத்தியிருந்த போதும் ரணில் விக்ரமசிங்க கௌரவமாக அமைதியைக் கடைபிடித்திருந்தார்.
ஒரு நாட்டின் தலைவராக இருந்து கொண்டு ஜனாதிபதி இவ்வாறு செயற்பட முடியாது. எனவே அவர் தனது வைராக்கியம் பழிவாங்கும் குணம் என்பவற்றை கைவிட்டு நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார்.
Post a Comment