Header Ads



பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து, அரசாங்கம் மந்திர ஆலோசனை

-Vi-

நாட்டில்  ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை  நீடிக்குமிடத்து  பாராளுமன்றத்தை கலைப்பது குறித்து   ஜனாதிபதி  தலைமையிலான  அரசாங்கம்  ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் ஜனாதிபதி  தரப்பு  சட்ட நிபுணர்களுடன்    ஆராய்ந்துவருவதாகவும்   தற்போதைய   பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சிகள் வெற்றிபெறாவிடின் அதனை  அடுத்த தெரிவாக ஜனாதிபதி கொண்டுள்ளதாகவும்   அரசாங்க மட்டத்தில் தெரியவருகின்றது. 

மேலும்  ஜனாதிபதிக்கு எந்தவொரு விடயம் குறித்து  உடனடியாக  சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான   அதிகாரம்  அரசியலமைப்பின் 86 ஆவது பிரிவின் ஊடாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

எனவே  சர்வஜன வாக்கெடுப்பை  நடத்துவதா   அல்லது  பொதுத்  தேர்தலை நடத்துவதா என்பது குறித்தும் ஆராயப்பட்டுவருவதாக  தெரியவருகின்றது. .

அரசியலமைப்பின் 19 ஆவது  திருத்தச் சட்டம்   நிறைவேற்றப்படுவதற்கு முன்னர்  பாராளுமன்றத்தை ஒரு வருடத்துக்கு பின்னர் கலைப்பதற்கான   அதிகாரம் ஜனாதிபதிக்கு   இருந்தது. 

ஆனால் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம்   நான்கரை வருடங்களுக்கு பின்னரே  பாராளுமன்றத்தை ஜனாதிபதி  கலைக்கலாம். ஆனால் அதற்கு இடையில்  வரவு செலவுத்திட்டம்  தோற்கடிக்கப்பட்டால் அல்லது    சபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான எம்.பி. க்கள்   ஆதரவு வழங்கி ஒரு பிரேரணையை கொண்டு வந்தால் பாராளுமன்றத்தை கலைக்கலாம். 

அதனைவிட  நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை  ஏற்பட்டால்  அதனை காரணம் காட்டி  ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை  கலைக்கலாம் என்று   ஒரு வாதம் தற்போது முன்வைக்கப்பட்டிரு்கின்றது. 

தற்போது  பாராளுமன்றத்தை பெரும்பான்மை ஆதரவுடன்  கலைப்பது சாத்தியமற்றதாகவே உள்ளது.  காரணம் பிரதான கட்சியான  ஐக்கிய தேசிய கட்சி அதனை எதிர்க்கின்றது.  எனவே   150 எம்.பி. க்களுடன் இணைந்து  யோசனை முன்வைத்து பாராளுமன்றத்தை கலைப்பது சாத்தியமற்றது. 

எனவே இந்த விடயங்களை  கருத்திற்கொண்டு  ஜனாதிபதி   தனது அதிகாரத்தின் கீழ்  பாராளுமன்றத்தை கலைப்பதற்கான  முயற்சிகளை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.   எனினும்  பாராளுமன்றத்தை கலைக்கும் விடயத்தை    இறுதி தெரிவாகவே   ஜனாதிபதி வைத்திருப்பதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்த பெரெரா கருத்து  வெ ளியிட்டுள்ளார். அதில் அவர்  ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி   பாராளுமன்றத்தை கலைக்க முயற்சிப்பதாகவும்  ஒருவேளை இன்று இரவே ( நேற்று நள்ளிரவு)  பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும்   தெரிவித்திருந்தார். 

இதேவேளை  இது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரிடம் நாம் வினவியபோது  பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பாராளுமன்றத்தை ஜனாதிபதி   கலைப்பதற்கான சாத்தியம் இருப்பதாக  தெரிவித்தார்.


1 comment:

  1. No choice. you have no majority and you all created this chaos. However, according to the new constitution president can not dissolve the parliament. Then the crisis will deepen and there will not be any redemption.

    ReplyDelete

Powered by Blogger.