Header Ads



இறைவன் அருளால் நான், விடுதலை செய்யப்பட்டுவிட்டேன் - கமர் நிஸாம்தீன்

அவுஸ்திரேலியாவில்  எனது நற் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியவர் அர்சலாத் கவாஜா என்பவரே. இதனால் நான், அவுஸ்திரேலியாவிலும், இலங்கையிலும் மன உளைச்சலுக்குள்ளானேன் என, கமர் நிஸாம்தீன் தெரிவித்தார்.

   பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்பு விடுதலை செய்யப்பட்ட இலங்கை இளைஞரான கமர் நிஸாம்தீன், கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார்.  அவுஸ்திரேலியாவில் குறித்த இளைஞர் முகங்கொடுத்த  அவலங்கள் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில்  ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பிலான உண்மை நிலையை ஊடகங்களுக்குத் தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பொன்று,  இன்று 7 ஆம் திகதி புதன்கிழமை மாலை,  கொழும்பு - சன்கிரில்லா ஹோட்டலில் (Colombo - Shangrilla Hotel - Lotus Boll Room Yellow)  இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, 

   பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், என்னைத் தடுத்து வைத்து, மீண்டும் குற்றமற்றவன் என, அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்ட நான், தற்போது இலங்கை வந்திருக்கிறேன்.   இது தொடர்பில், பத்திரிகை வாயிலாக முதலில் அறிவித்தவர், எனது சகோதரர் காலிக் நிஸாம்தீன் என்பவராவார்.

   எனக்கு செப்டம்பர் 28 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. குறிப்புப் புத்தகத்தில் இருந்த கையெழுத்து என்னுடையது அல்லாததால், என்மீது இருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி என்னை விடுதலை செய்தார்கள். 

ஜனாதிபதி, பிரதமர், திலக் மாரப்பன போன்றுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

   எனக்கு சகல வழிகளிலும் உதவி ஒத்தாசைகளைப் புரிந்த அனைவருக்கும் எனது நன்றிகள். எனது கல்லூரி நண்பர்களும் எனக்கு உதவினார்கள். 

அவுஸ்திரேலியாப் பொலிஸார், நான் ஒரு நிரபராதி என ஒப்புவித்து, என்னை விடுதலை செய்தார்கள். நான் தங்கும் இடத்தில் அல்லாது, வேறு ஒரு அறையில் அக்குறிப்புப் புத்தகம் இருந்ததே, நான் விடுதலை பெற பிரதான காரணமாகும். 

   அதன் பின்பு, அதில் இருந்த கை எழுத்து, என்னுடையது அல்ல என்பது நிரூபனமானது, எனது விடுதலைக்கு மற்றுமொரு காரணமாகும்.

   இது எனக்கு நடந்தேறியதற்கு பிரதான காரணம், நான் மாணவர் வீஸாவில் இருந்ததுடன், ஆஸிய பிரஜை ஒருவராக இருந்ததேயாகும்.

   நான் சட்டப்படி இங்கு வசித்து வந்ததைப் பொறுக்க முடியாதவர்களினாலேயே, இவ்வாறான வீணான சிக்கல்களும் பிரச்சினைகளும் எனக்கு வந்தேறின. இரகசியப் பொலிஸார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கைகளின் பேரிலேயே நான் கைது செய்யப்பட்டாலும், இந்த விவகாரம் தொடர்பில் நான் நிதானப் போக்கைக் கடைப்பிடித்தமையால், இறைவன் அருளால் நான் விடுதலை செய்யப்பட்டுவிட்டேன். 

   அவுஸ்திரேலிய சிறையில் நான் துன்புறுத்தப்படாவிட்டாலும் கூட, அதனால் நான் பெற்ற அவமானங்களும், கவலைகளும் அளப்பரியன. எனக்கும் வெளியுலகிற்கும் இடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எனது குடும்பத்தார் என்னுடன் தொடர்பு கொண்டு பேச, கிட்டத்தட்ட ஒரு மாதமளவில் சென்றன. இவ்வாறு கடுமையாக உளப்பாதிப்புக்குள்ளான எனக்கு, அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரும்,  நிவ் சவுன் வேல்ஸ் பொலிஸாரும், அங்கு கடமை புரியும் அதிகாரிகளுமே பிரதான காரண கர்த்தாக்களாக இருந்தார்கள்.

   என்னை 14 நாட்கள் எவ்வித முறைப்பாடுகளுமின்றி தடுத்து வைத்திருந்தார்கள். எனது கை எழுத்து இல்லை என்பதை, கையெழுத்து தொடர்பிலான விசேட நிபுணர்கள் இருவர் உறுதிபட நிரூபித்தார்கள். இதனால், நான் எவ்வித பாரதூரமான குற்றமற்றவனாக இறுதியில் விடுதலையானேன். 

   ஊடகம் வாயிலாக இதுபற்றி இவ்வாறு தெரிந்து கொண்டேன்.  அர்ஸலாத் காஜா எனும் நபர் இது தொடர்பில் ஆர்வம் காட்டி வருவதாக அறிந்தேன். நிவ் சவுன்வேல்ஸ் இல் உள்ள பல்கலைக் கழகத்தில் இருந்த இவர் எனது சுபர்வைஸர்களில் ஒருவராவார். எனது பெயரில் அல்லது எனக்கு அவமானம் ஏற்படும் வகையில் இவ்வாறான கைங்கரியத்தைச் செய்தவர் அர்சலாத் கவாஜா என்பவராவார். 

அந்தக் கடிதத்தில், மெல்கம் டர்ன்புல் மற்றும் ஜுலி பிசொப் கொலை என்பனவற்றைப் புரிய எத்தனிக்கப்பட்டது என்பதாகும். அத்துடன், ஒபேரா மாளிகையை குண்டு வைத்து தகர்ப்பதற்கும் முயற்சி புரிந்ததாக, அந்தக் கடிதத்தில்  போலியான முறையில் எழுதப்பட்டிருந்தது என்பதே உண்மை. 

   இந்த போலியான கடிதத்தைத் தயாரித்த நபருக்கும், பயங்கரவாதத்துக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்புண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

இவ்வாறான செயல்கள், எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய சதித்திட்டம் என்பதையும் இங்கு திட்டவட்டமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இதனால், எனது பெற்றோர்கள், குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கடும் அசெளகரியங்களைச் சந்தித்ததுடன், ஆழ்ந்த கவலையிலும் மூழ்கியிருந்தார்கள். இது தான், எனக்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட உண்மையான நிகழ்வாகும்  என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான்)

3 comments:

  1. வாழ்த்துக்கள் கமார் நிஷாம்தீன்,
    .
    போர்காலத்தில் அரசினதும் பல்தரப்பு போராளிகளதும் தடுப்புகளில் அகப்பட்டவன் என்கிற வகையிலும் விடுவிப்பதில்லை என்கிற அடிப்படையில் 2013ல் கோத்தபாயவால் கைதுசெய்யபட்டவன் என்கிற வகையிலும் அவுஸ்திரேலியச் சிறையில் நீங்கள் அனுபவித்திருக்கக்கூடிய இக்கட்டுகளை என்னால் உணர முடியும். அறம் வெற்றிபெற்ற மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  2. தன்னை மாட்டி விட்டவர் என இவர் குறிப்பிடும் பெயரை பார்த்தால் அது பாக்கிஸ்தானிய முஸ்லிம் நபர் போலுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.