சிறுபான்மை சமூகங்களின், பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்
நாட்டில் அரசியல் குழப்ப நிலை தோற்றம்பெற்று ஒரு மாத காலமாகின்ற நிலையில், அதனைத் தீர்ப்பதற்கான ஆரோக்கியமான நகர்வுகள் எதனையும் காண முடியவில்லை. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மைத்திரி- மஹிந்த - ரணில் தரப்பு பங்கேற்ற பேச்சுவார்த்தையிலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நாட்டுக்கு சர்வதேச ரீதியாக அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய தினம் பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது.எனினும் இன்றைய தினமும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு இடையூறுகள் விளைவிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகம் தென்படுகின்றன.
எது எப்படியிருப்பினும் நெருக்கடியான இந்த அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மைக் கட்சிகள் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் சந்திப்புகளை நடத்தி தத்தமது சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் தமது நிலைப்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த அரசியல் நெருக்கடி தொடருமாயின் சிறுபான்மை சமூகத்தினரே அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
'' நாட்டில் தற்போது பிரதமரும் இல்லை. அரசாங்கமும் இல்லை. அரச இயந்திரம் சீர்குலைந்துள்ளது. இந் நிலை தொடர இடமளிக்க முடியாது. இந் நிலை தொடர்ந்தால் சட்டமும் ஒழுங்கும் சீர்குலையும். சமூக விரோத சக்திகள் வன்முறைகளில் ஈடுபடலாம். அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் சிறுபான்மை மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்'' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
உண்மையில் சம்பந்தன் ஐயாவின் இந்தக் கருத்து ஊன்றிக் கவனிக்கத்தக்கதாகும். இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அனைத்தும் சீராக இயங்கும்போதே அளுத்கம, கிந்தோட்டை, அம்பாறை, கண்டி வன்முறைகள் தோற்றம் பெற்றன. அதனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று பிரதமரோ அமைச்சரவையோ இல்லாத நிலையில், நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் கூட சட்டவிரோதமானவர்கள் என்று கூறப்படுகின்ற நிலையில் ஏதேனுமொரு கலவரம் வெடித்தால், சிறுபான்மையினருக்கு எதிராக இனவாத சக்திகள் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டால் அது மிகப் பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அதேபோன்றுதான் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்த முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள், தற்போதைய அரசியல் குழப்ப நிலை தொடர்பில் விளக்கமளித்துள்ளனர். இதன்போது முஸ்லிம் எம்.பி.க்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தூதுவர்கள், முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட இடமளிக்க முடியாது என்றும் அது தொடர்பில் தாம் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியிருப்பினும் இந்த அரசியல் குழப்ப நிலை மேலும் மேலும் தொடர இடமளிப்பதானது நாட்டைக் குட்டிச்சுவராக்கவே வழிவகுக்கும். டொலரின் விலை அதிபரிப்பு, வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாத நிலை, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சி என நாடு அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கையில் வன்முறைகளோ அமைதியின்மையோ ஏற்படுமாயின் அது இன்னுமொரு உள்நாட்டுச் சண்டைக்கே வித்திடும் என்ற அச்சத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.
எனவேதான் மைத்திரி, மஹிந்த, ரணில் தரப்பு இந்த விடயத்தில் தமது தனிப்பட்ட கட்சி, அரசியல் நலன்களையும் விருப்பு வெறுப்புகளையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு அவசர அவசரமாக நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli
உறுதிப்படுத்த வேண்டியவர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். அல்லாஹ் ஒருவன் தான் எங்களை பாதுகாக்க வேண்டும்.
ReplyDelete