மைத்திரியின் பதவிக்காலம் முடிந்ததும், காத்திருக்கும் ஆபத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், ஒரு வருடத்திற்கு பின்னர் பதவிக்காலம் முடிந்ததும் நாட்டின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலம் வரை மட்டுமே வழக்கு தொடர முடியாது என்ற சிறப்புரிமை இருக்கின்றது என்பதை நான் ஜனாதிபதி சிறிசேனவுக்கு கூறிக்கொள்கிறேன்.
பதவிக்காலம் இன்னும் ஓராண்டில் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் அவர் சாதாரண பிரஜையாகி விடுவார்.
அப்போது நாட்டின் சட்டத்திற்கு அடிப்பணிய நேரிடும். இதனால், ஜனாதிபதி மேற்கொண்டு வரும் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்.
எமது முயற்சியானது மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியல்ல. நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் ஒழுங்கு முறையான ஆட்சியை ஏற்படுத்துவதே எமது முயற்சியாகும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment