மகிந்த சார்பில் மேற்கு நாடுகளுடன், இரகசிய பேச்சு நடத்தியவர்கள் இவர்கள்தான்
மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது.
அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த மற்றும், கூட்டு எதிரணியின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக இருந்த தரிந்து பாலசூரிய ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ரொரிங்டன் அவென்யூவில் உள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சர்லாந்து, ஜப்பான், நோர்வே, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திரிகள் பங்கேற்றனர் என்று தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, நீண்ட தாமதங்களால், நாட்டில் உறுதியற்ற நிலை ஏற்பட்டு வருவது குறித்து, பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனினும், இந்த நிலைமைக்கு சபாநாயகரே பொறுப்பு என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
Post a Comment