ஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...!
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால தடை உத்தரவின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள அலுவலகத்தில் கூடிய கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில், இறுதி துரும்புச் சீட்டாக ஜனாதிபதியை பயன்படுத்தி மீண்டும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லலாம் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற தேர்தல் தேவையா? இல்லையா? என மக்களின் கருத்தை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த யோசனையை பசில், ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் நிராகரித்துள்ளதாக பேசப்படுகிறது.
இங்கு கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ச, சிறுபான்மை மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்காத நிலைமை காணப்படுவதாகவும் இந்த நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால், மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.
இதனால், இந்த சந்தர்ப்பத்தில் குழப்பமடையாது பொறுமையாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக்கட்சி ஒற்றுமையாக இணைந்து நெருக்கடிக்கு முகம் கொடுத்த போதிலும் கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை நீர்ப்பூத்த நெருப்பாக இருப்பதாகவும் அமைச்சு பதவிகளை பகிரும் போது இந்த பிரச்சினை வெளியில் கிளம்பும் எனவும் அடுத்த இரண்டு மாதங்களில் உட்கட்சி பிரச்சினை உக்கிரமடையும் என்றும் பசில் விளக்கியுள்ளார்.
அந்த நேரத்தில் செயற்பட்டு அதன் ஊடாக அரசியல் நன்மையை பெற முடியும் எனவும் தற்போது எந்த குழப்பமும் இல்லாமல் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
Post a Comment