Header Ads



வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ''விடியல்'' நூல் அறிமுக விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'விடியல்' நூல் அறிமுக விழா 2018 டிசம்பர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலையில் பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் விசேட அதிதியாக முன்னாள் கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அலுவல்கள் துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

கொடைவள்ளல் அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா, ஓய்வு பெற்ற அதிபர் கவிஞர் மூதூர் முகைதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கொழும்பு பல்கலைக்கழக உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், மூஷான் இன்டர்நெஷனல் தலைவர் அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், இப்ராஹீமிய்யா கல்லூரி பணிப்பாளர் அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், டாக்டர் அல்ஹாஜ். ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி.),  கலாநிதி யூசுப் கே. மரைக்கார், பன்னூலாசிரியர் கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், அமேசன் கல்லூரி பணிப்பாளர் ஜனாப். இல்ஹாம் மரிக்கார், அஸீஸ் மன்றத் தலைவர் அல்ஹாஜ் அஷ்ரப் அஸீஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்வார்கள்.

மௌலவி. காத்தான்குடி பௌஸ் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பிக்கவிருக்கும் இந்நிகழ்வில் தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளரும் எழுத்தாளருமான யாழ். ஜுமானா ஜுனைட் வரவேற்புரையை நிகழ்த்த வாழ்த்துரைகளை சிரேஷ்ட கலைஞர் கலைச்செல்வன், காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் என்.எம். அமீன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள். 

'ரிம்ஸா முஹம்மத் என்ற ஒரு முன்னணிப் படைப்பாளர்'என்ற தலைப்பில் எழுத்தாளர் கலாபூஷணம் மு. சிவலிங்கம் உரை நிகழ்த்த கவிஞர் யாழ் அஸீம் கவி வாழ்த்தை நிகழ்த்துவார். தொடர்ந்து கலாபூஷணம் திக்குவல்லை கமால் கருத்துரை வழங்க கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர், சட்டத்தரணி ஜீ. இராஜகுலேந்திரா நயவுரை வழங்குவார். ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் நிகழ்த்துவார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை திக்வல்லை ஸும்ரி தொகுத்து வழங்கவுள்ளார் என ஏற்பாட்டாளர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கலை இலக்கியவாதிகள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளார்கள். 



No comments

Powered by Blogger.