Header Ads



முகமது பின் சல்மானை விமர்சித்தவர், துருக்கியிலுள்ள சவுதி தூதரகம் சென்றபோது காணாமல் போனார்

காணாமல்போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் ஹாஷாக்ஜி-க்கு ஆதரவாக, அவர் எழுதி வரும் பத்திக்கான இடத்தை காலியாகவிட்டு பதிப்பை வெளியிட்டுள்ளது வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்.
குறிப்பிட்ட பக்கத்தில் வெள்ளையாக விடப்பட்ட அந்த பத்திக்கான இடத்துக்குமேல் மேல் "காணாமல் போன ஒரு குரல்" என்று பொருள் தரும் வகையில், "ஏ மிஸ்ஸிங் வாய்ஸ்" என்று தலைப்பிட்டுள்ளது அந்தப் பத்திரிகை.

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்துவந்த ஹாஷாக்ஜி செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சௌதி துணை தூதரகத்திற்கு சென்ற பின்னர் காணவில்லை.

அவரது வேலைகளை முடித்து தூதரக கட்டடத்தை விட்டு சென்றுவிட்டதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது. ஆனால், அவர் உள்ளேயே இருப்பதாக துருக்கி கூறுகிறது.

இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள வாஷிங்டக் போஸ்ட் நாளிதழ், ஹாஷாக்ஜி போன்ற நாட்டுப்பற்றாளர்களின் ஆரோக்கியமான விமர்சனங்களை இளவரசர் சல்மான் வரவேற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

பட்டத்து இளவரசரின் கொள்கைகளை பற்றி டுவிட்டரில் பதிவிடுவதை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்டார் ஹாஷாக்ஜி.

சௌதி பட்டத்து இளவரசர் பத்திரிகையாளர்களை வேலை செய்ய அனுமதிக்கும் வகையில், அவருடைய அதிகாரத்தில் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்று இந்த நாளிதழ் தலையங்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக மூத்த சௌதி அதிகாரிகளுக்கு ஆலோசகராக இருந்த ஹாஷாக்ஜி, சௌதி செய்தித்தாளில் எழுதி வந்த பத்தி நிறுத்தப்பட்ட பிறகு வெளிநாட்டில் குடியேறினார்.

பட்டத்து இளவரசரின் கொள்கைகளை பற்றி டுவிட்டரில் பதிவிடுவதை நிறுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டார்.

59 வயதான உரையாசிரியரான ஹாஷாக்ஜி நாடு கடந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருவதோடு, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் எழுதியும் வருகிறார்.

துருக்கி காதலி ஹட்டீஜ் என்பவரை திருமணம் செய்வதற்காக அதிகாரபூர்வ விவாகரத்து ஆவணங்களை பெறுவதற்கு ஹாஷாக்ஜி இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபியாவின் துணை தூதரகத்திற்கு சென்றார்.

தூதரகத்திற்கு வெளியே காதலியிடம் செல்பேசியை கொடுத்துவிட்டு சென்ற அவர், தான் திரும்பி வராவிட்டால், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகரை தொலைபேசியில் அழைத்து விவரம் சொல்ல கூறியுள்ளார்.

நள்ளிரவு வரை வெளியே காத்திருந்த பின்னரும் ஹாஷாக்ஜி திரும்பி வரவில்லை என்று ஹட்டீஜ் கூறியுள்ளார். புதன்கிழமை காலை தூதரகம் திறந்த பின்னர்தான் ஹட்டீஜ் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

ஹாஷாக்ஜி தூதரகத்தின் உள்ளேதான் இருக்கிறார் என்று துருக்கி தெரிவித்துள்ளது.

தன்னுடைய ஆவணங்கள் தொடர்பான வேலைகளை முடித்த பின்னர் ஹாஷாக்ஜி சென்றுவிட்டதாக சௌதி அதிகாரி கூறியுள்ளார்.

தூதரகத்தை விட்டு சென்ற பின்னர், ஹாஷாக்ஜி காணாமல் போய்விட்டது தொடர்பான விவகாரத்தில் துருக்கி அதிகாரிகளோடு ஒத்துழைப்பதாக தூதரகத்தை மேற்கோள்காட்டி வியாழக்கிழமை சௌதி செய்தி நிறுவனத்தின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஹாஷாக்ஜி காணாமல்போனது தொடர்பான தகவல்களை கேட்டுள்ள அமெரிக்க உள்ளதுறை அமைச்சகம் அவரது பாதுகாப்பு பற்றி கவலை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் புலப்படும் மர்மம் துருக்கிக்கும், சௌதி அரேபியாவுக்கும் இடையே நிலவும் உளவு சிக்கலை ஆழப்படுத்தும் என்று பிபிசியின் மார்க் லோவன் கூறியுள்ளார்.

சௌதி அரேபியாவும், பிற பக்கத்து நாடுகளும் கத்தார் மீது தடைகள் விதித்தபோது, துருக்கி கத்தாருக்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்தது.

ஈரானுடன் துருக்கி நல்லிணக்கம் கொண்டிருப்பது சௌதி அரேபிய அரசை கோபப்படுத்தியுள்ளது.
ஹாஷாக்ஜியிடம் இருந்து சௌதி அரேபியா எதை எதிர்பார்க்கிறது?

மேற்குலக நாடுகளால் புகழப்படும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் சௌதி பட்டத்து இளவரசரின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களில் ஒருவர்தான் ஹாஷாக்ஜி.

மனித உரிமை மற்றும் பெண்ணுரிமை ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோரை கைது செய்தது, கருத்து வேறுபாடுகள் கொண்டோர் மீதான அடக்குமுறை, மனிதநேய நெருக்கடியை ஏற்படுத்திய ஏமன் போர் ஆகியவை பற்றி இவர் விமர்சனங்கள் தெரிவித்துள்ளார்.

சௌதி அரச குடும்பத்தின் நெருக்கமானவராகவும், மூத்த சௌதி அதிகாரிகளுக்கு ஆலோசகராகவும் ஹாஷாக்ஜி பல ஆண்டுகளாக இருந்தார் என்கிறார் அல்-வடான் செய்தித்தாள் மற்றும் சிறுது காலம் ஒளிபரப்பான சௌதி செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் பதிப்பாசிரியர்.

அவருடைய நண்பர்கள் பலரும் கைது செய்யப்பட்ட பிறகு, ஹாஷாக்ஜியின் பத்தியை அல்-ஹயாட் செய்தித்தாள் அச்சிடுவதை நிறுத்தியது. ஹாஷாக்ஜி டுவிட்டர் பதிவிடுவதை நிறுத்த வேண்டுமென எச்சரிக்கப்பட்டார்.

அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட ஹாஷாக்ஜி, அங்கிருந்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பத்தி எழுதி வந்தார். அரேபிய மற்றும் மேற்குலக தொலைக்காட்சிகளில் தோன்றி பேசி வந்தார்.

"நான் எனது வீட்டையும், குடும்பத்தையும், வேலையையும் விட்டு வந்து எனது குரலை எழுப்பி வருகிறேன்" என்று செப்டம்பர் 2017-ம் ஆண்டு எழுதிய ஹாஷாக்ஜி, "இவ்வாறு செய்யாமல் இருந்தால், சிறையில் அடைக்கப்படுவோரை காட்டிக்கொடுப்பது போலாகும். பலர் பேசாமல் இருக்கிறபோது, என்னால் பேச முடிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.



2 comments:

  1. “விசுவாசிகளே! (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்தபோதிலும் நீதியை நிலைநிறுத்தி அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்.

    (சாட்சி கூறப்படும்) அவர் பணக்காரராக இருந்தாலும் சரி. அல்லது ஏழையாக இருந்தாலும் சரி (உண்மையையே கூறுங்கள்)”

    (அல் குர்ஆன் 4:135)

    ReplyDelete
  2. Its a sample of Yahuthi arabian king's activities but inside the country uncounted nos.

    ReplyDelete

Powered by Blogger.