Header Ads



கொழும்பில் இந்திய போர்க்கப்பல், அலரி மாளிகைக்குள் இந்திய பெருங்கடல்


இந்தியக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக வந்துள்ள இந்தியக் கடற்படையின் நாசகாரி கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ராஜேஸ் நாயர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையின் மேற்கு பிராந்திய தளபதி றியர் அட்மிரல் நிசாந்த உலுகெதென்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதில் இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவும் கலந்து கொண்டார்.

146 மீற்றர் நீளம் கொண்ட ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பலில் 35 அதிகாரிகள் உள்ளிட்ட 350 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

அதிநவீன பிரமோஸ், தனுஷ் உள்ளிட்ட ஏவுகணைகளைத் தாங்கிய இந்தக் கப்பலில் உலங்குவானூர்தி ஒன்று தரித்திருக்கும் வசதிகளும் உள்ளன.

இந்தக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

2

‘எமது எதிர்காலத்தை வரையறை செய்யும் இந்தியப் பெருங்கடல்’ என்ற தொனிப்பொருளில் மூன்று நாள் மாநாடு, அலரி மாளிகையில் உள்ள சிறிலங்கா பிரதமரின் செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர்களும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதிச் செயலர் அலிஸ் வெல்ஸ், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரமுகர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்தியப் பெருங்கடலை அண்டிய நாடுகள் மற்றும் அதனைப் பெருமளவில் பயன்படுத்தும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்கான தளம் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய, இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், பூகோள ரீதியாக பொதுவானதொரு சொத்தாகத் திகழும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளுக்குமான சமத்துவத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய, சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம்  மற்றும் பெருங்கடல் விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் யி ஷியான்லியாங், இந்தியப் பெருங்கடல், கடல் வழிப் பாதையில்  செயற்பாடுகள் சுதந்திரமாக இடம்பெறுவதற்கு நவீன சவால்களாக உருவாகி வரும் விடயங்கள் தொடர்பில் கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.


No comments

Powered by Blogger.