Header Ads



ஜமாலை தேடுமாறு, மன்னர் சல்மான் உத்தரவு

காணாமல்போன சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி சென்று அந்நாட்டு மன்னர் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்மூலம் கசோக்கிக்கு என்ன ஆனது என்பது பற்றி விளக்கமளிக்க சவூதிக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்தான்பூல் துணைத் தூதரகத்திற்குள் நுழைந்தபோதே கசோக்கி கடைசியாக காணப்பட்டார். சவூதி முகவர்களால் கசோக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என்று துருக்கி அதிகாரிகள் சந்தேகிப்பதோடு இதனை சவூதி நிராகரித்து வருகிறது.

எவ்வாறாயினும், கசோக்கி மீதான குறுக்கு விசாரணையின்போது ஏற்பட்ட தவறால் அவர் உயிரிழந்ததை ஒப்புக்கொள்ள சவூதி தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே சவூதி நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து கடந்த திங்களன்று இஸ்தான்பூலில் இருக்கும் துணைத் தூதரகத்தில் துருக்கி பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சவூதி மன்னர் இடையே நேற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அதுபற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் நேற்று பின்னேரம் வரை வெளியிடப்படவில்லை. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட கருத்தை பொம்பியோ சவூதி மன்னரிடம் கூறுவார் என்று நம்பப்படுகிறது.

சவூதி மன்னருடன் தொலைபேசியில் பேசியது குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டரில், “சவூதி மன்னருடன் சற்று முன்னர் பேசினேன். தமது சவூதி பிரஜைக்கு என்ன ஆனது என்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர் மறுத்தார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்துக் கூறிய அவர், “அந்த மறுப்பு மிக மிக பலமாக இருந்தது. அதனைப் பார்க்கும்போது இது முரட்டுத்தனமான கொலைகாரர்களின் வோலையாக இருக்கக் கூடும். யாருக்குத் தெரியும்?” என்றார்.

சவூதி மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் பலவீனம் ஏற்பட்டிருப்பது அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன. சவூதியுடனான ஆயுத விற்பனையை ரத்துச் செய்வது குறித்து டிரம்ப் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தபோதும், இந்த மரணத்திற்கு சவூதி பொறுப்பு என கண்டறியப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

காணாமல்போன ஊடகவியலாளரை தேடுவதற்கு மன்னர் சல்மான் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டார். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என்றே சவூதி தொடர்ந்து கூறி வருகிறது.

நாட்டின் மீதான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை சவூதி கோபத்துடன் நிராகரித்து வருகிறது. தடைகள் போன்ற தண்டனை நடவடிக்கைக்கான பதில் நடவடிக்கை பெரிதாக இருக்கும் என்று அது எச்சரித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.